Published : 20 Oct 2022 07:08 AM
Last Updated : 20 Oct 2022 07:08 AM

புரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை கட்சிகளுக்கு ரூ.464 கோடி நன்கொடை

புதுடெல்லி: பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ரூ.464.81 கோடியை நன்கொடைய புரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை வழங்கியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி பெற்று வருகின்றன. அவ்வாறு கட்சிகளுக்கு நிதியை புரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை வழங்கியுள்ளது. இந்த அறக்கட்டளை உள்பட மொத்தம் 5 தேர்தல் அறக்கட்டளைகள் இணைந்து 2021-2022-ம் நிதி ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.481.05 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளன.

இதில் 72 சதவீத நிதியை பாஜக பெற்றுள்ளது. காங்கிரஸுக்கு 3.8 சதவீத நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவுக்கு ரூ.336 கோடியும், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு தலா ரூ.16 கோடியும் அளிக்கப்பட்டது. பாஜகவுக்கு 26 தவணைகளாக இந்த ரூ.336 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில் 7 தேர்தல் அறக்கட்டளைகள் இணைந்து ரூ.258.4 கோடி நன்கொடைகளை வழங்கி உள்ளது. இதில் பாஜக ரூ.215.5 கோடி(82 சதவீதம்), காங்கிரஸ் கட்சி ரூ.5.4 கோடியை(2.1 சதவீதம்) நிதியாக பெற்றுள்ளது.

2021-2022-ம் ஆண்டில் காங்கிரஸை விட மாநில கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி ரூ.21.1 கோடியை நிதியாக பெற்றுள்ளது. இதில் புரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை ரூ.16.3 கோடியும், இன்டிபென்டன்ட் தேர்தல் அறக்கட்டளை ரூ.4.8 கோடியும் வழங்கி உள்ளது. புரூடென்ட் அறக்கட்டளையிடம் இருந்து டிஆர்எஸ் கட்சி பெற்ற நிதி ரூ.40 கோடி ஆகும். இதே அறக்கட்டளை சமாஜ்வாடி கட்சிக்கு ரூ.27 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20 கோடி, சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு ரூ.7 கோடி, பஞ்சாப் லோக் காங்கிரஸுக்கு ரூ.1 கோடி வழங்கி உள்ளது. கோவா பார்வர்ட் கட்சிக்கு ரூ.50 லட்சம் தேர்தல் நிதியாகக் கிடைத்துள்ளது.

இதில் புரூடென்ட் அறக்கட்டளைக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ரூ.45 கோடியை வழங்கியுள்ளது. ஹெட்டெரோ டிரக்ஸ், ஹெட்டெரோ லேப்ஸ் நிறுவனம் தலா ரூ.5 கோடியை, புரூடென்டுக்கு வழங்கியுள்ளது. மேலும் டோரண்ட் பார்மா நிறுவனம் ரூ.2 கோடியை, புரூடென்டுக்கு வழங்கியுள்ளது. அதேபோல் பார்தி ஏர்டெல் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ரூ.52.5 கோடியை தேர்தல் நிதியை புரூடென்டுக்கு வழங்கியுள்ளது. ஆர்செலார் மிட்டல் டிசைன் அன்ட் இன்ஜினீயரிங் சென்டர் நிறுவனம், ஆர்செலார் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனம் ஆகியவை இணைந்து புரூடென்ட் அறக்கட்டளைக்கு ரூ.130 கோடியை தேர்தல் நிதியாக வழங்கியுள்ளது.

பல்வேறு நிறுவனங்களிட மிருந்து பெற்ற நிதியைக் கொண்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியை புரூடென்ட் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பாஜகவுக்கு 26 தவணைகளாக ரூ.336 கோடியும், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு தலா ரூ.16 கோடியும் அளிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x