Published : 11 Oct 2022 01:47 AM
Last Updated : 11 Oct 2022 01:47 AM

சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே, தீபச்சுடர் - உத்தவ் பிரிவுக்கு கட்சி பெயர், சின்னங்கள் ஒதுக்கீடு

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக.வுடன் கூட்டணி வைத்து முதல்வரானார். இந்நிலையில் கட்சி பெயர், வில் - அம்பு சின்னத்துக்கு உரிமை கோரி முதல்வர் ஷிண்டே, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகிய இரு தரப்பினமும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.

இந்நிலையில், அந்தேரி கிழக்குதொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் முதல்வர் ஷிண்டே பிரிவினர் போட்டியிடவில்லை. பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவுள்ளார். இதையடுத்து, இதற்கு முன்பு இருந்த நிலையை பின்பற்ற அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் உத்தவ் தலைமையிலான பிரிவு கூறியது.

அந்தேரி கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கவுள்ளதால், சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை தற்காலிகமாக முடக்குவதாக தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது. மேலும்,வேறு பெயர்களையும், சின்னங்களையும் தேர்வு செய்து, அதன் முடிவை இன்று மதியத்துக்குள் தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

உத்தவ் தாக்கரே பிரிவினர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தங்கள் கட்சிக்கு சிவசேனா (பாலசாகிப் தாக்கரே), சிவசேனா (உத்தவ் பாலசாகிப் தாக்கரே), சிவசேனா (பிரபோதங்கர் தாக்கரே) ஆகிய மூன்று பெயர்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்கவும், திரிசூலம், உதயசூரியன், தீபச்சுடர் ஆகிய சின்னங்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்கும்படியும் தெரிவித்தது.

அதன்படி, தற்போது சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவுக்கு சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே என்ற பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மேலும் கட்சியின் சின்னமாக தீபச்சுடர் சின்னத்தையும் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவுக்கு பாலாசாஹேபஞ்சி சிவசேனா (பாலாசாகேப்பின் சிவசேனா) என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஷிண்டே கோஷ்டிக்கு இன்னும் கட்சி சின்னம் ஒதுக்கப்படவில்லை. நாளை காலை 10 மணிக்குள் மூன்று புதிய விருப்பங்களை வழங்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கனவே இரு தரப்பும் திரிசூலம், தண்டாயுதம் போன்ற சின்னங்களை தேர்வு செய்து அனுப்பியது. ஆனால், அவை மத அடையாளங்களாக இருப்பதால் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால் இப்போது ஷிண்டே தரப்பு வேறு மூன்று சின்னங்களை தேர்வு செய்ய உள்ளது.

இதனிடையே, தேர்தல் ஆணையம் கட்சி பெயர், சின்னம் ஒதுக்கீடு செய்ததில் உத்தவ் தாக்கரே தரப்பு திருப்தி தெரிவித்துள்ளது. "எங்களுக்கு மிகவும் முக்கியமான மூன்று பெயர்கள் - உத்தவ் ஜி, பாலாசாஹேப் மற்றும் தாக்கரே. இவை அனைத்தையும் கட்சிப் பெயரில் தக்கவைக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரான பாஸ்கர் ஜாதவ் தெரிவித்துள்ளார். அதேபோல் முதல்வர் ஷிண்டேவும் "இறுதியாக சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரேவின் வலுவான இந்துத்துவ கருத்துகளுக்கு கிடைத்த வெற்றி. பாலாசாகேப்பின் எண்ணங்களின் வாரிசுகள் நாங்கள்..." என்று கட்சியின் புதிய பெயருக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x