Published : 07 Oct 2022 04:16 AM
Last Updated : 07 Oct 2022 04:16 AM

உலக அரங்கில் இந்தியா வளர்ந்த நாடாக மாறி வருகிறது - மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம்

சென்னை: உலக அரங்கில் இந்தியா வளர்ந்தநாடாக மாறி வருகிறது என்று சிஏ பட்டமளிப்பு விழாவில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதத்துடன் கூறினார்.

இந்திய கணக்கு தணிக்கையாளர் கல்வி நிறுவனம் சிஏ எனப்படும் கணக்கு தணிக்கையாளர் தேர்வை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழா டெல்லியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் சென்னை உட்பட13 மையங்களில் இருந்து மாணவர்கள் இணைய வழியில் கலந்துகொண்டனர். சென்னையில் கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர். பட்டமளிப்பு விழாவில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றியதாவது:

உன்னதமான பணிகளில் சிஏ பணியும் ஒன்று. சிஏ படிப்பது என்பது சாதாரணமானது அல்ல. அதற்கு தீவிர தயாரிப்பும், சவால்களை சமாளிக்கும் திறனும் அவசியம். அடிப்படையில் நானும் சிஏ பட்டதாரிதான்.

சிஏ தேர்வை நடத்தும் அமைப்பான இந்திய கணக்கு தணிக்கையாளர் கல்வி நிறுவனம், இந்தியா மட்டுமின்றி 47 நாடுகளில் 168 கிளைகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போது இந்தியாவில் 3 லட்சத்து 50 ஆயிரம் சிஏ பட்டதாரிகள் உள்ளனர். அவர்களில் 28 சதவீதம் பேர் பெண்கள். ஏறத்தாழ 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் சிஏ படித்து வருகின்றனர். அவர்களில் 45 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சூழலில் உலக அரங்கில் இந்தியா வளர்ந்த நாடாக மாறிவருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் சிஏ பட்டதாரிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளிக்க முடியும். நம் நாடு உலக சாம்பியனாக உருவெடுக்க வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் விருப்பம்.

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழாவின்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து உறுதிமொழிகளை முன்வைத்தார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது, காலனியாதிக்க மனோபாவத்தை துடைத்தெறிவது, நமது பாரம்பரிய முறைகளை மீட்டெடுப்பது, தேச ஒற்றுமை, கடமை உணர்வு என அந்த 5 உறுதிமொழிகளையும் மனதில் வைத்து சிஏ பட்டதாரிகள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

இந்திய கணக்கு தணிக்கையாளர் கல்வி நிறுவன தலைவர் டெபாசிஸ் மித்ரா, துணை தலைவர்அனிகட் சுனில் தலாட்டி ஆகியோரும் பேசினர். இதைத்தொடர்ந்து சென்னையில் நடந்த நேரடி பட்டமளிப்பு விழாவில் 1500 பேர் சிஏ பட்டம் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சென்னை மண்டல தலைவர் சின்னமஸ்தான் தலக்காயலா பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். விழாவில், மண்டல ஒருங்கிணைப்பாளர் கள் ராஜேந்திர குமார், பிரியா குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x