Published : 29 Sep 2022 03:59 AM
Last Updated : 29 Sep 2022 03:59 AM

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம் - ராணுவ விவகாரத் துறைச் செயலராகவும் செயல்படுவார்

அனில் சவுகான்

புதுடெல்லி: முப்படை தலைமை தளபதியாக, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ராணுவ விவகாரத் துறைச் செயலராகவும் செயல்படுவார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தின் முப்படைகளும் இணைந்து செயல்படுவதற்காக, முப்படை தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது.

நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பதவி ஏற்றார். இந்நிலையில், தமிகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி பிபின் ராவத் உயிரிழந்தார்.

அதன் பின்னர் இந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இப்பொறுப்பை, முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே கவனித்து வந்தார்.

இந்நிலையில், புதிய முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகானை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர், ராணுவ விவகாரத் துறையின் செயலராகவும் செயல்படுவார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றிய அனில் சவுகான், ராணு வத்தின் பல்வேறு பிரிவுகளுக்குத் தலைமை வகித்துள்ளார். கடந்த 1981-ம் ஆண்டு ராணுவத்தின் கூர்கா ரைபிள்ஸ் படைப் பிரிவில் சேர்ந்த அனில் சவுகான், தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமி ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.

கடந்த 2019 முதல் 2021-ம் ஆண்டு மே 31-ம் தேதி ஓய்வுபெறும்வரை இவர் கிழக்கு மண்டல ராணுவத் தளபதியாகப் பணியாற்றினார். ராணுவத்தில் இவர் ஆற்றிய சேவைக்காக பரம் விசிஷ்ட் சேவா, உத்தம் யூத் சேவா, அதி விசிஷ்ட் சேவா, சேனா மற்றும் விசிஷ்ட் சேவா பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x