Published : 07 Sep 2022 12:12 PM
Last Updated : 07 Sep 2022 12:12 PM

டெல்லியில் இந்த தீபாவளிக்கும் பட்டாசு வெடிக்கத் தடை: சுற்றுச்சூழல் அமைச்சர் உத்தரவு

பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள் | கோப்புப் படம்.

புதுடெல்லி: டெல்லியில் வரும் ஜனவரி 1, 2023 வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பகிர்ந்த ட்வீட்டில், வரும் ஜனவரி 1, 2023 வரை டெல்லியில் பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை, பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. மக்களின் நலனைப் பேண இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார். ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கும் தடை விதிக்கப்படுவதாகவும், இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் டெல்லி போலீஸ் மற்றும் டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே காற்று மாசு அதிகம் உள்ள மாநிலமாக டெல்லி விளங்குகிறது. வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் ஆகியவையே டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும், காற்று மாசை முழுமையாக கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. இதன் காரணமாக, டெல்லிவாசிகள் பெரும்பாலானோர் நுரையீரல் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு மேலும் பல மடங்கு அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதை கருத்தில்கொண்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால், காலதாமதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பட்டாசு விற்பனையையும், பட்டாசுகள் வெடிப்பதையும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் முன் கூட்டியே தடை விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் செப்டம்பரிலேயே தடை அமலுக்கு வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் 24ல் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த மாதம் முதல் ஜனவரி 1, 2023 வரை பட்டாசுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகைக்கு கடந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்கள் தடை விதித்தபோது சிவகாசி பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் தடையை நீக்கி பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x