Published : 24 Aug 2022 08:45 PM
Last Updated : 24 Aug 2022 08:45 PM

இந்தியாவில் சுகாதாரமும் ஆன்மிகமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை: பிரதமர் மோடி பேச்சு

ஃபரிதாபாத்: ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாதில் 2,600 படுக்கைகளைக் கொண்ட நவீனமான அம்ரிதா மருத்துவமனையினை பிரதமர் மோடி புதன்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாக்ரேயா, முதல்வர் மனோகர் லால், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, மத்திய அமைச்சர் கிர்ஷன் பால் குர்ஜார், மாதா அமிர்தானந்தமாயி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் பேசியது: “நாடு அமிர்த காலத்தில் நுழையும் நிலையில், கூட்டான விருப்பங்களும், தீர்மானங்களும் நல்வடிவம் பெறுகின்றன. மாதா அமிர்தானந்தமயியின் ஆசிகளை நாடு பெற்றிருப்பது பொருத்தமானதாக அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை நவீனம் மற்றும் ஆன்மீகத்தின் கலவையாக உள்ளது. நலிந்த பிரிவு நோயாளிகளின் சிகிச்சைக்கு எளிதாகவும், குறைந்த செலவிலும் மருத்துவ வசதி கிடைப்பதாக இது மாறும். அம்மா என்பது அன்பு, கருணை, சேவை, தியாகம் ஆகியவற்றின் உருவகமாகும். அவர் இந்தியாவின் ஆன்மீக மரபை கொண்டு செல்பவர்.

மருத்துவ சிகிச்சையை சேவையாகவும், நல்வாழ்வை அறமாகவும் கருதுகின்ற நாடு இந்தியா. இங்கு சுகாதாரமும், ஆன்மீகமும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை. மருத்துவ அறிவியலை நாம் வேதமாக கொண்டிருக்கிறோம். நமது மருத்துவ அறிவியலுக்கு நாம் ஆயுர்வேதம் என்றும் பெயர் வைத்திருக்கிறோம். நூற்றாண்டு கால சிக்கலான அடிமை நிலையிலும் கூட இந்தியா தனது ஆன்மிகத்தையும், சேவை பாரம்பரியத்தையும் மறந்து விடவில்லை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான பொறுப்புகளை சமயம் சார்ந்த, சமூகம் சார்ந்த நிறுவனங்களோடு தொடர்புபடுத்தும் பழங்கால மாதிரியில் அரசு மற்றும் தனியார் துறையில் செயல்படுத்தப்படுகிறது. இது அரசு – தனியார் பங்களிப்பாக கூறப்படுகிறது. ஆனால் இதனை ‘பரஸ்பர முயற்சி’யாகவும் நான் காண்கிறேன்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசி பற்றி ஒரு சிலரால் தவறான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் காரணமாக சமூகத்தில் பல வகையான வதந்திகள் பரவத் தொடங்கின. சமூகத்தின் சமயத் தலைவர்களும், ஆன்மீக போதனையாளர்களும் ஒன்று சேர்ந்து இத்தகைய வதந்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொண்டதன் பயன் உடனடியாக தெரிய வந்தது. இதனால் மற்ற நாடுகளில் பார்த்தது போல் இந்தியா தடுப்பூசி தயக்கத்தை எதிர்கொள்ளவில்லை.

அமிர்த காலத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் நாட்டின் முன் 5 உறுதிமொழிகளை தாம் வைத்திருக்கிறேன். அவற்றில் ஒன்று அடிமை மனோபாவத்திலிருந்து முற்றிலுமாக விடுபடுவது. இந்த தருணத்தில் நாட்டில் இது குறித்து ஏராளமான விவாதங்கள் நடந்திருக்கிறது.

அடிமை மனோநிலையை நாம் கைவிடும்போது நமது செயல்களின் திசையும் மாறுகின்றன. இந்த மாற்றம் நாட்டில் சுகாதார கவனிப்பு முறையில் கண்கூடாக தெரிகிறது. நாட்டின் பாரம்பரிய அறிவின் மீதான நம்பிக்கை வளர்ந்து வருகிறது. யோகாவிற்கு உலகளாவிய அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டினை உலகம் கொண்டாட இருக்கிறது.

அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு கிடைத்திருக்கும் ஹரியானா, நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம் என்பதில் மிகச் சிறந்த பங்களிப்பு செய்திருக்கும் ஹரியானா மக்களை இந்தவேளையில் நான் பாராட்டுகிறேன். உடல் தகுதி, விளையாட்டு போன்றவை ஹரியானாவின் கலாச்சாரத்திலேயே உள்ளது” என்று பிரதமர் பேசினார்.

ஃபரிதாபாதில் அம்ரிதா மருத்துவமனையை தொடங்கி வைத்திருப்பது தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு ஊக்கமளிக்கும், நவீன மருத்துவ கட்டமைப்பு வசதி கிடைக்கும். மாதா அமிர்தானந்தமயி மடத்தால் நிர்வகிக்கப்படும் இந்த பன்னோக்கு மருத்துவமனை 2,600 படுக்கை வசதிகளை கொண்டது. ரூ.6,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை ஃபரிதாபாத் மற்றும் ஒட்டு மொத்த தேசிய தலைநகர் பிராந்தியத்தின் மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகளை வழங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x