Published : 06 Apr 2014 04:13 PM
Last Updated : 06 Apr 2014 04:13 PM
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சனிக்கிழமை சுதாகரன் நேரில் ஆஜரானார். சசிகலா, இளவரசி இருவரும் ஆஜராகாததால் இருவருக்கும் நீதிபதி டி'குன்ஹா கடும் கண்டனம் தெரிவித்தார். திங்கள்கிழமை மூவரும் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் பி.குமார்,திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசன், அரசு வழக்கறிஞர் பவானி சிங்,அவரது உதவி வழக்கறிஞர் முருகேஷ் எஸ்.மரடி ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் சுதாகரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு உடல்நிலை சரியில்லாததால்,அவரது முன்னிலையில் அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி 6-வது நாளாக தனது இறுதி வாதத்தை தொடர்ந்தார். ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தில் பணியாற்றிய ஊழியர் கள்,கொடநாடு பங்களாவில் பணியாற்றிய ஊழியர்கள் அளித்த வாக்குமூலங்களை வாசித்தார்.
“ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் சுதாகரனின் திருமண வரவேற்பிற்கான மேடை அலங்காரம், மலர் வளைவுகள், பந்தல் அமைத்தது உள்ளிட்ட பல வேலைகளை செய்தேன்.அதற்காக ரூ. 2 கோடி செலவானது'' என சுதாகரன் திருமணத்திற்கு அலங்கார உதவிகளை செய்த தியாகராஜன் கொடுத்திருந்த வாக்குமூலத்தையும் வாசித்தார்
ஸ்ரீ ஹரி என்பவர் அளித் துள்ள வாக்குமூலத்தில், “ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் உம்மிடி பங்காரு நகைக் கடையில் 250 வைர கற்கள் பொருத்திய தங்க ஒட்டியானம் வாங்கினேன். இது தவிர தங்க செயின், மோதிரம், வளையல்கள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கினேன்'' எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதிவாதம் திங்கள் கிழமையும் தொடரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT