Published : 19 Oct 2016 07:52 PM
Last Updated : 19 Oct 2016 07:52 PM
சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கான உரிமத்தை புதுப்பித்து கொடுத்ததற்காக பணி இடை நீக்கம் செய்யப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜி.கே.திவேதி 50 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.
வெளிநாட்டு நன்கொடைகள் முறைமை சட்டத்தின்படி ஜாகிர் நாயக் நடத்தி வரும் இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளைக்கு உரிமம் புதுப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக திவேதி உட்பட உள்துறை அமைச்சகத்தின் மூன்று அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் சார்பில் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் திவேதி கடினமாகவும் நேர்மையாகவும் உழைக்கக் கூடியவர் என ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான சங்கத்தின் பிரதிநிதிகளும், மூத்த அரசு உயரதிகாரிகளும் அவருக்கு நற்சான்று வழங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று அவர் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT