Published : 15 Jun 2014 01:00 AM
Last Updated : 15 Jun 2014 01:00 AM
மறைந்த நீதிபதி கிருஷ்ணசாமி ஐயரின் ஐந்து செயல்பாடுகளை, நீதித்துறை, சட்டத்துறை மற்றும் பொதுமக்கள் அனைவரும் கடை பிடித்தால் தவறாமல் நீதி வழங்க முடியும் என்று, உச்சநீதிமன்ற நீதிபதி எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற மறைந்த நீதிபதி கிருஷ்ணசாமி ஐயரின் 150வது பிறந்தநாள் நிறைவு விழா, மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவனில், சனிக்கிழமை நடந்தது. இதில் கிருஷ்ணசாமி ஐயரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கிருஷ்ணசாமி ஐயர் கல்வி அறக்கட்டளை, மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கிருஷ்ணசாமி ஐயரின் பேத்தி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா தேவன், கிருஷ்ணசாமி ஐயரின் பேரன் எம்.கே.மணி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினர்.
சமஸ்கிருதக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா பேசியதாவது:
கிருஷ்ணசாமி ஐயர், நீதித்துறை மட்டுமின்றி, கலை, இலக்கியம், சமஸ்கிருதம் போன்ற பல துறைகளிலும் சேவை செய்துள்ளார். அவரது மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரி இந்தியாவிலேயே சமஸ்கிருதம் படிக்க சிறந்த கல்லூரியாக திகழ்கிறது.
அவரது குடும்பத்தினரும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். அவரது பேத்தி பிரபா தேவன் நீதித்துறையில் பல முக்கியமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதில் ஒன்றுதான், பெண்களை இன்று அனைவரும் ஹவுஸ் ஒயிப் என்று அழைப்பதற்கு பதிலாக ஹோம் மேக்கர் என்று அழைக்க வைத்தது.
அவரது தாத்தா கிருஷ்ணசாமி ஐயர் இப்படித்தான் பயமின்றி, பாரபட்சமின்றி, யார் மீதும் வெறுப்பின்றி, பேராசையின்றி, வழக்குதாரர்களிடம் தனியாக பேச்சு நடத்தாமல், சரியான நீதியை வழங்கினார்.
அவரது இந்த ஐந்து செயல்பாடுகளை நீதித்துறை, சட்டத்துறை, போலீஸ், பொதுமக்கள் என அனைவரும் பின்பற்றினால், சரியான நீதி வழங்கமுடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT