Last Updated : 27 Oct, 2016 02:11 PM

 

Published : 27 Oct 2016 02:11 PM
Last Updated : 27 Oct 2016 02:11 PM

சோனியாவுக்கு எதிரான தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதே விவகாரம் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருவதால் மனுவை விசாரிப்பது ஏற்புடையதாக இருக்காது எனக் கூறி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

வழக்கு விவரம்:

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து ரமேஷ் சிங் என்பவர் லக்னோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், சோனியா காந்தி இத்தாலியில் பிறந்தவர். இரட்டை குடியுரிமை கொண்டவர் அவர். அவர் பிறந்த நாட்டின் சட்டத்தின்படி அந்நாட்டின் குடிமகன் ஒருவர் இரட்டை குடியுரிமை கொண்டிருப்பதற்கு அனுமதியில்லை. அப்படியிருக்க அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதே செல்லாது.

அதேபோல், சோனியா காந்தி தேர்தலுக்கு முன்பாக முஸ்லிம் மதத் தலைவர்கள் மூலம் தனது கட்சிக்கு சாதகமாக வாக்களிக்குமாறு கோரியிருக்கிறார். பிரச்சாரத்தைத் தாண்டி இவ்வாறு தனிப்பட்ட முறையில் தேர்தல் ஆதாயம் நிமித்தமாக பேசுவது ஊழல் நடைமுறையாகும். எனவே சோனியா காந்தியின் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கவேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த லக்னோ உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்வே உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் சிங் மேல் முறையீடு செய்தார்.

'இப்போதைக்கு விசாரிப்பதற்கு இல்லை'

இந்நிலையில், இந்த மனு நீதிபதி இன்று (வியாழக்கிழமை) நீதிபதி ஏ.ஆர் தவே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீதான விசாரணையை ஒத்திவைத்த நீதிபதிகள், இதே விவகாரம் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது.

எனவே இந்த மனுவை தற்போது நாங்கள் விசாரிப்பது பொருத்தமாக இருக்காது. அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்து முடிவு செய்யட்டும். அதுவரை எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்கப் போவது இல்லை" என்று தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x