Last Updated : 04 Oct, 2016 10:46 AM

 

Published : 04 Oct 2016 10:46 AM
Last Updated : 04 Oct 2016 10:46 AM

பஞ்சாபில் தீவிரவாதிகள் ஊடுருவலா?- பிஎஸ்எப் வீரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம்

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் பகுதியில் உள்ள சாக்ரி எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் (பிஎஸ்எப்) துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்ததாக வெளியான தகவலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் உரியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்குள் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய எல்லைப் பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் எல்லையொட்டிய இந்திய பகுதிகளிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் உள்ள சாக்ரி எல்லை வழியாக நேற்று முன் தினம் இரவு 10.45 மணிக்கு தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் வீரர்கள் அவர்களை எச்சரிக்கும் வகையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பஞ்சாப் மாநில போலீஸ் உயரதிகாரி கூறும்போது, ‘‘எல்லையில் ஊடுருவியது வனவிலங்குகளா அல்லது மனிதர்களா என்பது உறுதியாக தெரியவில்லை. பிஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதற்கு, பாகிஸ்தான் தரப்பில் இருந்து பதில் தாக்குதலும் நடத்தப்படவில்லை’’ என்றார்.

மூத்த பிஎஸ்எப் அதிகாரிகளும் ஊடுருவல் விவகாரம் குறித்து தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அதே சமயம் இந்த சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரங்களுக்குள் குருதாஸ்பூர் துணை ஆணையர் பர்தீப் சபர்வால் இல்லத்தில் பிஎஸ்எப் அதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகள் ஒன்றுகூடி எல்லை நிலவரம் குறித்து ஆலோசித்துள்ளனர். மேலும் மதோபூரில் உள்ள பிஎஸ்எப் அலுவலகத்திலும், ராணுவ உயரதிகாரிகள் மற்றும் உளவு அமைப்பான ரா, ஐபி அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்ட கூட்டமும் நடந்துள்ளது.

எல்லையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாட்டம் இருப்பது கண்டறியபட்டதால் சாக்ரி எல்லை அருகே உள்ள தோரங்கலா கிராமத்தில் மாநில போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம மக்களிடமும் சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் எல்லை நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடமும் அவர் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x