Published : 12 Aug 2022 12:24 PM
Last Updated : 12 Aug 2022 12:24 PM

75-வது சுதந்திர தின விழா | பெருங்கூட்டங்களை தவிர்க்க மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பெரும் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டுவிழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இது 75வது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் எல்லா துறைகள் சார்ந்தும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சுதந்திர தின விழாவில் பெருங் கூட்டங்களை தவிர்க்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. நாட்டில் அன்றாடம் குறைந்தது 15 ஆயிரம் பேருக்காவது புதிதாக கரோனா தொற்று உறுதியாகிறது. இந்நிலையில் சுதந்திர தின விழாவில் பெருங்கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும், அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூய்மை இந்தியா திட்டத்தினை மாவட்டந்தோறும் பிரதமான இடங்களில் மையப்படுத்தி பிரபலப்படுத்துமாறும் உள் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

புதிதாக 16,561 பேருக்கு தொற்று: கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 16,561 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 535 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 49 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இதில் 10 கேரளாவில் இருந்து தாமதமாகக் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரமாகும். இதுவரை நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 5 லட்சத்து 26 ஆயிரத்து 928 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x