Published : 31 Oct 2016 03:08 PM
Last Updated : 31 Oct 2016 03:08 PM

நீதிபதிகளின் தொலைபேசி ஒட்டுகேட்பு: மோடி முன்னிலையில் கேஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

நீதிபதிகள் தொலைபேசி அழைப்புகளை மத்திய அரசு ஒட்டுகேட்பதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் பொன் விழா கொண்டாட்டத்தில் பேசியபோது கேஜ்ரிவால் முன்வைத்த இந்த பகிரங்க குற்றச்சாட்டை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மறுத்துள்ளார்.

டெல்லி விஞ்யான் பவனில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாகூர், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த விழாவில் கலந்து கொண்ட கேஜ்ரிவால், "தங்கள் தொலைபேசி அழைப்புகள் மத்திய அரசால் ஒட்டுகேட்கப்படுவதாக நீதிபதிகள் சிலர் கவலையில் இருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவது உண்மையென்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்க செயலாகும்.

நீதிபதிகள் தொலைபேசி அழைப்பு ஒட்டுகேட்கப்படுவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். நீதித்துறையின் சுதந்திரத்தில் அத்துமீறும் செயலாகும். உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் வழங்கிய பரிந்துரைகளை 9 மாதங்களாக அரசு கிடப்பில் போட்டுள்ளது. கொலீஜியத்துடன் மோதல் போக்கை கடைபிடிப்பது உகந்தது அல்ல.

அனைத்து அதிகாரங்களும் ஒருவரிடமே தேங்கிவிட்டால் நாடு சர்வாதிகாரத்தில் சிக்கக்கூடும். நீதிபதிகள் நியமனத்தில் காலம் தாழ்த்துவது அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையேயான இடைவெளியை மேலும் மேலும் அதிகரிக்கும்" என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், "ஒரு சட்ட அமைச்சர் என்ற முறையில் கேஜ்ரிவால் முன்வைக்கும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன். நீதிபதிகள் நியமனத்தில் சுமுகமான முடிவு எட்டப்படுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டு வருகிறது" என்றார்.

பிரதமர், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அர்விந்த் கேஜ்ரிவால் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x