Last Updated : 01 Aug, 2022 09:54 PM

 

Published : 01 Aug 2022 09:54 PM
Last Updated : 01 Aug 2022 09:54 PM

“பிரதமர் மோடி அவர்களே... அந்த ஒன்றாம் வகுப்பு குழந்தைக்கு பதில் என்ன?” - மக்களவையில் கனிமொழி ஆவேசம்

புதுடெல்லி: “பொருளாதரச் சரிவிற்கு பிறகும் கறுப்பு பணம் கைப்பற்றப்படுவது ஏன்?” என மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார். திங்கள்கிழமை தொடங்கிய விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் கலந்து கொண்ட அவர் முதன்முறையாக தமிழில் நீண்ட உரையாற்றினார்.

இதுகுறித்து மக்களவையின் திமுக குழுத் துணைத் தலைவரும், எம்பியுமான கனிமொழி பேசியது: “தற்போது பேசி அமர்ந்திருக்கக் கூடிய பாஜகவின் நிஷிகாந்த் துபே கறுப்பு பணத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். கோடி கோடியாக கறுப்பு பணம் பாஜக ஆளாத மாநிலங்களில் கைப்பற்றியிருப்பதாக கூறினார். ‘2016 -ல் பணமதிப்பிழப்பை கொண்டு வந்த பின்பு கறுப்பு பணமே இல்லாமல் ஆகிவிடும் என்று அறிவித்தார்கள். அதற்குப் பின்னரும் நாட்டில் கறுப்பு பணம் எப்படி உலவுகிறது என்பதைச் சொன்னால் வசதியாக இருக்கும். ஏனென்றால், பணமதிப்பிழப்புக்குப் பிறகு இந்தியா பெருமளவில் பொருளாதாரத்தில் சரிந்திருக்கிறது.

தமிழகத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக ஆட்சியில் இருந்தபோது சட்டமன்றத்தில் அரசு வைத்த ‘பாலிசிட் நோட்’எனப்படும் கொள்கைக் குறிப்பில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 50 ஆயிரம் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்பதை பதிவு செய்திருக்கிறார்கள்.

எத்தனையோ பேர் பணமதிப்பிழப்பு காலத்தில் வங்கி வரிசையில் நின்று உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனையோ இன்னல்களை இந்த நாடு பணமதிப்பிழப்பால் சந்தித்திருக்கிறது. இதற்குப் பிறகு கறுப்பு பணம் இருக்காது என்று இவர்கள் சொன்ன வாக்குறுதியால் தான் நாடு இத்தனை துன்பங்களையும் தாண்டி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஏற்றுக் கொண்டது. ஆனால், இன்னமும் கறுப்பு பணம் கைப்பற்றப்படுகிறது என்று செய்திகளைப் படிக்கிறோம்.

இவ்வளவு இன்னல்களையும், இவ்வளவு பொருளாதாரச் சரிவையும் சந்தித்த பிறகும் ஏன் கறுப்புப் பணம் கைப்பற்றப்படுகிறது? இதற்கான விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும். அதுதான் உயிரிழந்த மக்களுக்கான நியாயமாக இருக்கும். அடித்தட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் போராட்டத்தோடு வாழும் நிலையை இந்த ஆட்சி உருவாக்கியுள்ளது.

இந்த அரசு பதவி ஏற்பதற்கு முன்பாக 2014-ல் பெட்ரோல் விலை ரூ.71. டீசல் ரூ.53. எல்பிஜி சிலிண்டர் ரூ.414. இன்றைக்கு சிலிண்டர் ரூ.1,200. பெட்ரோல் ரூ.100-யைத் தாண்டி விட்டது. டீசல் விலை ரூ.100-யைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் அடிக்கடி சொல்லும் ஆம் ஆத்மிகள் எனும் சாதாரண மக்கள் அதிகம் இருக்கும் இந்நாட்டில் அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் முதல் மூன்று லிட்டர் வரை பெட்ரோல் போட வேண்டிய நிலை உள்ளது. கோவிட் பரவலில் எம்பிக்களின் வருமானத்தையே குறைத்தது அரசு. அது நியாயம், அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் சம்பளத்தை பாதியாகக் குறைத்தது. பலருக்கு வேலையே போனது.

இந்த நிலையில் மாதம் ரூ.15 ஆயிரம் பெட்ரோலுக்கும், சிலிண்டருக்கு ரூ.1,000 என்று கொடுக்க வேண்டிய நிலையில் அந்த குடும்பம் எப்படி வாழ முடியும்? உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. 2012-ல் ரூ.68 விற்ற ஒரு லிட்டர் பாமாயில் இன்று ரூ.160. ரூ.70 க்கு விற்ற வனஸ்பதி இன்று ரூ.170. ரூ.116 ஆக இருந்த கடலை எண்ணெய் இன்று ரூ.188க்கு விற்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் பயன்படுத்தக் கூடிய எண்ணெய் விலை ஏறிக் கொண்டிருக்கிறது.

வெங்காய விலை குறைந்திருக்கிறது, தக்காளி விலை குறைந்திருக்கிறது என்று அமைச்சர் சொன்னார். சாப்பாட்டுக்கு பதில் வெங்காயத்தையும் தக்காளியையும் வைத்து சட்னி அரைத்தே சாப்பிட முடியுமா? பிள்ளைகளுக்கு உணவு வாங்கக் கூட ஒரு தாயால் முடியவில்லை. சிலிண்டர் மானியம் தருகிறோம் என்று சொல்லி கோட்டாவை விட்டுக் கொடுத்து விடுங்கள் என்று சொன்னீர்கள். பலரும் விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் இன்று பலருக்கும் எல்பிஜி மானியம் வங்கிக் கணக்குக்கு வருவதே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

அசிம் பிரேம்ஜி பல்கலைகழகத்தின் ஓர் அறிக்கையில், இதுவரை இல்லாத அளவு 23 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே விழ வேண்டிய நிலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய தர வர்க்கத்தில் இருந்த 3.2 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இதுதான் இந்தியாவின் நிலை. ஆனால் இந்தியாவில் ஒரு தொழிலதிபர் உலகத்திலேயே நான்காவது பணக்காரராக உயர்வு பெற்றிருக்கிறார். பில்கேட்ஸை விட வேகமாக வளர்கிறார். சிலர் மட்டுமே இங்கு வாழ்கிறார்கள். காரணம் பெறுநிறுவனங்களுக்கு தான் எல்லா வரிச்சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

நான் தொழில் வளர்ச்சி வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அடித்தட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு எந்த உதவியும் செய்யத் தயங்கக் கூடிய இந்த ஆட்சி, பெறுநிறுவனங்களை வளர்த்தெடுத்து வார்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது. கோவிட் வருவதற்கு முன்பே 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மோசமான வேலையற்ற நிலையைச் சந்தித்தோம். கடந்த அக்டோபரில் 5 மில்லியன் பேருக்கு வேலை இல்லாமல் போகும் சூழலை உருவாக்கி வைத்திருக்கிறோம். நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் என்ன? என்ற கேள்வி பூதாகரமாக விரிந்து நிற்கிறது.

வெற்றி, தோல்வியையும், காழ்ப்புணர்ச்சியை மட்டுமே வைத்துக் கொண்டு ஓர் அரசியலையோ ஆட்சியையோ நடத்த நினைப்பது நாட்டுக்கு நிச்சயமாக நியாயமாக இருக்காது. ஒற்றுமையின் சின்னம் என்று சிலைகளை உருவாக்கி மார் தட்டிக் கொள்கிறோம். ஆனால் மக்களை மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மொழியின் பெயரால் பிரித்தாள நினைப்பது என்ன நியாயம்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இங்கே உறுப்பினர் துபே சொன்னார், ‘எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ரிசர்வ் பேங்க் கடன் கொடுக்கத் தயாராக இல்லை’என்று கூறினார்கள்.

நான் ஒரே ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். நீங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிலுவையில் இருக்கும் ஜிஎஸ்டி தொகையைக் கொடுத்தாலே போதும். வேறு எந்த கடனும் தரவேண்டாம். வளமான மாநிலத்தை உருவாக்கிக் காட்டுவோம்.

பென்சில் விலையும் உயர்ந்ததாகக் கூறும் குழந்தைக்கு என்ன பதில்:

இன்று பிரதமர் மோடிக்கு ஒரு குழந்தை கடிதம் எழுதியிருக்கிறார். இந்தியில்தான் எழுதியிருக்கிறார். அதில், ‘என் பெயர் கிருத்தி துபே நான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறேன். மோடிஜி அவர்களே உங்கள் ஆட்சியில் நான் வாங்கும் பென்சில், ரப்பர் விலை கூட அதிகரித்து விட்டது. நான் சாப்பிடும் மேகியின் விலையும் உயர்ந்துவிட்டது. பென்சில் கேட்டால் என் அம்மா என்னை அடிக்கிறார்? நான் என்ன செய்யட்டும்?’ அந்த குழந்தை என்று கேட்டிருக்கிறது. அந்தக் குழந்தைக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து கனிமொழி பேச்சுக்கு ஆளும் பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு கூச்சல் எழுப்பினார்கள். அப்போது எம்பி கனிமொழிக்கு ஆதவாக சுப்ரியா சுலே உள்ளிட்ட உறுப்பினர்கள் ‘எழுந்து அமருங்கள்’ என்று பாஜகவினரை நோக்கிக் கூறினார்.

தொடர்ந்து பேசிய கனிமொழி, “நீங்கள் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது? இப்போதுதான் அமைச்சர் எழுந்து, ‘நீங்கள் பேசும்போது நாங்கள் பேசமாட்டோம். நாங்கள் பேசும்போது நீங்கள் பேசாதீர்கள்’என்று சொன்னார். தற்போது சொன்ன வாக்குறுதியைக் கூட காற்றில் பறக்க விட்டால் நாங்கள் என்ன செய்வது?

கடந்த யுபிஏ ஆட்சியிலே பெட்ரோல் விலை, எல்பிஜி விலை உயர்த்தப்பட்டபோது நரேந்திர மோடி மிகக் கடுமையாக எதிர்த்தார். காங்கிரஸ் தலைமையிலான அரசின் நிர்வாகத் தோல்வியை இது காட்டுகிறது. இது கோடிக்கணக்கான குஜராத்திகளை பாதிக்கும் என்று அன்று குஜராத் முதல்வராக இருந்து மோடி கூறினார். இன்று பெட்ரோல் விலையை குறைக்கக் கூடிய இடத்திலே நீங்கள் இருக்கிறீர்கள். இன்று உலகசந்தையிலே பெட்ரோல் டீசல் விலை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அந்த வீழ்ச்சியின் எந்த பலனும் இங்கே இருக்கக் கூடிய சாதாரண மனிதனை எட்டவில்லை என்பது வருத்தமளிக்கக் கூடியது” என்றார் கனிமொழி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x