Published : 01 Aug 2022 05:46 PM
Last Updated : 01 Aug 2022 05:46 PM

நில ஊழல் வழக்கு: சஞ்சய் ரவுத்தை 4 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி

மருத்துவமனை பரிசோதனை முடித்து வெளியேறும் சஞ்சய் ரவுத்

மும்பை: நில ஊழல் வழக்கில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்தை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமலாக்கத் துறை 8 நாட்கள் காவல் அனுமதி கோரிய நிலையில் நீதிமன்றம் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், "வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்ததில் சம்பந்தப்பட்ட நபரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிப்பது அவசியம் என்று கருதுகிறோம். ஆனால், 8 நாட்கள் விசாரணை செய்ய அனுமதிக்க இயலாது. எனவே சஞ்சய் ரவுத்தை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதியளிக்கிறது" என்று தெரிவித்தது.

அப்போது குறுக்கிட்ட சஞ்சய் ரவுத்தின் வழக்கறிஞர், "ரவுத் இதய நோயாளி என்பதால் அவரிடம் நள்ளிரவு வரை விசாரணை நடத்தக்கூடாது" என்று கோரினார். அதற்கு அமலாக்கத்துறை சார்பில் "வழக்கமாகவே தாங்கள் இரவு 10 மணிக்கு மேல் யாரையும் விசாரிப்பதில்லை" என்று தெரிவிக்கப்பட்டது. சஞ்சய் ரவுத்துக்கு வீட்டு உணவை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி: வடக்கு மும்பையில் உள்ள கோரேகான் புறநகர் பகுதியில் ‘பத்ரா சால்’ என அழைக்கப்படும் சித்தார்த் நகரில், 47 ஏக்கரில் 672 வீடுகள் இருந்தன. இப்பகுதியை மேம்படுத்த மகாராஷ்டிரா வீட்டு வசதி ஆணையத்தில் பத்ரா சால் சொசைட்டி உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு கடந்த 2008-ம் ஆண்டு குரு ஆஷிஸ் கன்ஸ்ட்ரக்சன் (ஜிஏசி) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.

அதன்படி, இந்த நிறுவனம் பத்ரா சால் பகுதியில் அகற்றப்படும் 672 வீடுகளுக்கு மாற்று வீடுகளும், மகாராஷ்டிர வீட்டு வசதி ஆணையத்துக்கான வீடுகளையும் கட்டித்தர வேண்டும். அதன்பின் மீதமுள்ள இடத்தை இந்நிறுவனம் விற்பனைசெய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த ஜிஏசி நிறுவனம் எச்டிஐஎல் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் துணைநிறுவனம் ஆகும். எச்டிஐஎல் நிறுவனம், பிஎம்சி என்ற கூட்டுறவு வங்கியில் ரூ.6,700 கோடி கடன் பெற்று ரூ.2,700 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்த நிறுவனம். இதனால், இந்த வங்கியே திவால் நிலைக்கு சென்றது.

மகாராஷ்டிர வீட்டு வசதி ஆணையத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ஜிஏசி நிறுவனம் 672 வீடுகளை கட்டிக் கொடுக்கவில்லை. மாறாக பத்ரா சால் நிலத்தை 9 நிறுவனங்களுக்கு ரூ.901.79 கோடிக்கு விற்றது. மேலும், அங்கு ‘மியாடோஸ்’ என்ற பெயரில் கட்டுமான திட்டத்தையும் தொடங்கி ரூ.138 கோடி வசூலித்தது. ஆக மொத்தம் ரூ.1,039.79 கோடி அளவுக்கு ஜிஏசி ஆதாயம் அடைந்தது.

10 சதவீத கமிஷன் இதையடுத்து, ஜிஏசி நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர் பிரவீன் ரவுத்துக்கு, எச்டிஐஎல் கணக்கில் இருந்து ரூ.100 கோடி வழங்கப்பட்டது. இந்தப் பணத்தை அவர் தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என பலருக்கு பிரித்துக் கொடுத்தார்.

கடந்த 2010-ம் ஆண்டு பிரவீன் ராவத்மனைவி மாதுரியிடம் இருந்து, சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்தின் மனைவி வர்ஷா ரவுத் ரூ.83 லட்சம் பெற்றார். இது கடனாக வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்தப் பணத்தில் மும்பை தாதர் பகுதியில் சஞ்சய் ரவுத்தின் மனைவி வீடு ஒன்றை வாங்கினார்.

இதுதவிர கிம் பீச்,அலிபாஹ் பகுதியில், 8 வீட்டு மனைகள் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா, நெருங்கிய நண்பரான சுஜித் பட்கரின் மனைவிஆகியோரது பெயரில் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.11.8 கோடி.

பத்ரா சால் நில ஊழலில் நடந்த நிதி மோசடி குறித்து அமலாக்கத் துறை விசாரணை தொடங்கியதும், கடனாக பெற்ற பணத்தை திருப்பிச் செலுத்துவதாக கூறி ரூ.55 லட்சத்தை மாதுரியின் வங்கிக் கணக்குக்கு சஞ்சய் ரவுத் மனைவி வர்ஷா திருப்பிச் செலுத்தியுள்ளார். சஞ்சய் ரவுத்தின் மனைவி, அவரது நண்பரின் மனைவி ஆகியோர் முறைகேடாக பெற்ற சொத்துகளை அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் மாதம் முடக்கியது.

விசாரணை மற்றும் கைது: இது தொடர்பாக சஞ்சய் ரவுத்திடம் அமலாக்கத் துறை கடந்த ஜூலை 1-ம் தேதி 10 மணி நேரம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலங்களை பதிவு செய்தது. கடந்த மாதம் 20-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை கூறியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கலந்துகொள்ள வேண்டும் என கூறி அவர் ஆஜராகவில்லை. இதனால் கடந்த மாதம் 27-ம் தேதிஆஜராக புதிதாக சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதும், இதே காரணத்தை கூறி அவர் ஆஜராகவில்லை.

இதனால் மும்பை பாந்த்ரா புறநகர் பகுதியில் உள்ள சஞ்சய் வீட்டில் நேற்று காலை 7 மணி அளவில், அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்பின், சஞ்சய் ராவத்தை நேற்று மாலை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், அவர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x