Published : 08 May 2016 12:29 PM
Last Updated : 08 May 2016 12:29 PM
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010-ல் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த வெங்கய்ய நாயுடு, ஆயனூர் மஞ்சுநாத், காங்கிரஸை சேர்ந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் முடிகிறது. தவிர, சுயேச்சை எம்.பி. விஜய் மல்லையா ராஜினாமா செய்துள்ளார்.
இந்த 4 இடங்களுக்கான தேர்தல் இம்மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது.
கர்நாடக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் காங்கிரஸ் 2 உறுப்பினர்களையும், பாஜக ஒருவரையும் தேர்வு செய்ய முடியும். மீதமுள்ள ஓர் உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கு காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் போதிய உறுப்பினர்கள் இல்லை. எனவே முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவைப் பெற காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் இறங்கியுள்ளன.
ஆஸ்கர் பெர்னாண்டஸ், வெங்கய்ய நாயுடு ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
எனவே காங்கிரஸ் சார்பில் 2-வது உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரை, கர்நாடகா சார்பில் தேர்ந்தெடுக்கக் கூடாது எனக் கூறி முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் மாநிலங்களவை உறுப்பினராக சிதம்பரத்தை தேர்வு செய்ய சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். எனவே கர்நாடகாவைச் சேர்ந்த பி.கே.ஹரி பிரசாத், ராஜீவ் கவுடா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதனிடையே காங்கிரஸ், மஜத கூட்டணியுடன் எஞ்சிய உறுப்பினர் இடத்தை பிடிக்க முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா திட்டமிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT