Published : 21 Jun 2022 05:50 AM
Last Updated : 21 Jun 2022 05:50 AM

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனுக்கு தொடர்பு - மத்திய அமைச்சர் சந்தேகம்

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று மத்திய அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அமைச்சர் முரளிதரன் கூறியதாவது:

கேரளாவில் கடந்த ஆண்டு நடந்த தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கவலையும் சந்தேகமும் எழுந்துள்ளது. முதல்வரின் கீழ் செயல்படும் பொது நிர்வாகத் துறையின் செயல்பாடுகளும் ஐக்கிய அரபு அமீரக ஊழியர்களுடனான அவரின் தொடர்புகளும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் பினராயி விஜயனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பினராயி விஜயன் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வழக்கில் மத்திய அரசின் விசாரணைக்கு மாநில அரசு தடையாக உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் ஊழல் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x