Published : 18 Jun 2022 05:15 AM
Last Updated : 18 Jun 2022 05:15 AM

உர ஏற்றுமதி ஊழல்: ராஜஸ்தான் முதல்வரின் சகோதரர் வீட்டில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: உர ஏற்றுமதி ஊழல் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் மற்றும் பிறருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட்டின் சகோதரர் அக்ரசென் கெலாட். இவர் அனுபம் கிரிஷி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்திய விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மியூரேட் ஆப் பொட்டாஷ் உரத்தை அக்ரசென் கெலாட் தனது நிறுவனம் மூலம் கடந்த 2007 முதல் 2009 வரை மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த 2020-ல் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து சுங்கத் துறை சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அக்ரசென் கெலாட்டின் வாக்கு மூலத்தை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு பதிவு செய்தது. இந்நிலையில் உர ஏற்றுமதி ஊழல் தொடர்பாக அக்ரசென் கெலாட் மற்றும் பிறருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ராஜஸ்தான், குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த சோதனை நடைபெற்றது. இது, பிரதமர் நரேந்திர மோடி அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x