Published : 11 Jun 2022 07:33 AM
Last Updated : 11 Jun 2022 07:33 AM

லடாக்கில் மணல் திட்டு மீது கார் ஓட்டியவருக்கு ரூ.50,000 அபராதம்

விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்ட கார்.

லே: லடாக்கில் சுற்றுலா சென்ற போது மணல் திட்டு மீது கார் ஓட்டியவருக்கு போலீஸார் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

லடாக்கின் லே மாவட்டம் நுப்ரா பள்ளத்தாக்கில் ஹண்டர் என்ற இடம் உள்ளது. லடாக்கில் அதிக உயரத்தில் உள்ள குளிர் பாலைவனம் இங்குள்ளது. லே நகரில் இருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள ஹண்டர் கிராமம், அழகான மணல் திட்டுகள் மற்றும் மணல் குன்றுகளுக்கு புகழ் பெற்றது. இங்கு இயற்கையான நிலப்பரப்பு பாதிக்கப்படும் என்பதால் மணல் திட்டுகள் மீது கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு தம்பதியினர் விடுமுறையில் லடாக் வந்துள்ளனர். இவர்கள் ஹண்டர் கிராமத்தில் மணல் திட்டு மீது தங்கள் காரை நிறுத்தியிருந்ததை கண்ட போலீஸார் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதனை லே மாவட்ட போலீஸார் தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும் விதிமீறலில் ஈடுபட்ட காரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதைக் கண்ட சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் பலர், தம்பதியின் பொறுப்பற்ற செயலை கண்டித்துள்ளனர். ஒருவர் தனது பதிவில், “எங்கள் லே மாவட்ட போலீஸாரின் நடவடிக்கை பெருமிதம் கொள்ளச் செய்கிறது. போக்குவரத்து விதிகள் கடுமையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் சுற்றுலாப் பயணிகள் விதிமீறலில் ஈடுபட்ட மாட்டார்கள். தயவு செய்து மலைகள், நிலப்பரப்பை சுத்தமாக வைத்திருங்கள். மேலும் இதுபோன்ற கடுமையான போக்குவரத்து விதிகளை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

அந்தக் கார், டெல்லி வாகனப் பதிவு எண்ணை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள பலர், “டெல்லி மற்றும் ஹரியாணாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளே இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x