Published : 31 May 2022 06:16 PM
Last Updated : 31 May 2022 06:16 PM

ராஜஸ்தானில் திடீர் திருப்பம்: மாநிலங்களவைத் தேர்தலில் 5-வது வேட்பாளராக சுபாஷ் சந்திரா: களமிறக்கியது பாஜக


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 4 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக 5-வது வேட்பாளராக பிரபல ஊடக நிறுவன உரிமையாளர் எஸ்செல் குழுமத் தலைவர் சுபாஷ் சந்திராவை பாஜக களமிறக்கியுள்ளது.

மொத்தம் 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 100 ஆக உள்ளது. மாநிலங்களவையில் இப்போதும் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்றாலும், முப்பது வருடங்களில் நூறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. 1990-ம் ஆண்டில்தான், காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் 108 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அதன் பிறகு தற்போது தான் பாஜக 100 இடங்களை தொட்ட கட்சியாக உள்ளது.

இந்தநிலையில் ஜூன் 10-ம் தேதி மீண்டும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் 57 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 24 இடங்கள் பாஜக வசம் உள்ளன. சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதனால் 32 ஆண்டுகளுக்கு பிறகு பெற்ற 100 என்ற சாதனை பறிபோகும் சூழல் உள்ளது.
இதனால் அதிகமான இடங்களை பிடிக்க பாஜக பகீரத பிரயத்தனம் செய்யும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக பாஜக 5 வேட்பாளராக பிரபல ஊடக நிறுவன உரிமையாளர் எஸ்செல் குழுமத்தின் தலைவர் குழுமத் தலைவர் சுபாஷ் சந்திராவை களமிறக்கியுள்ளது. பாஜகவு ஆதரவுடன் அவர் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். எஸ்ஸல் குழுமத்தின் தலைவரான சுபாஷ் சந்திரா ஜீ குழுமம் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் தலைவராவார்.

சுபாஷ் சந்திரா

ராஜஸ்தானில் மாநிலங்களவைக்கு நான்கு இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் 3 மற்றும் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. சுபாஷ் சந்திரா ஐந்தாவது வேட்பாளராக களமிறங்குவதால் நான்காவது இடத்துக்கு இப்போது போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு காங்கிரஸைச் சேர்ந்த உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரமோத் திவாரி போட்டியிடுகிறார்.

ரன்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகிய மூன்று காங்கிரஸ் வேட்பாளர்கள். பாஜக சார்பில் முன்னாள் அமைச்சரான கன்ஷியாம் திவாரி ஏற்கெனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார்.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் ஒவ்வொரு வேட்பாளரும் வெற்றிபெற 41 வாக்குகள் தேவை. காங்கிரஸுக்கு 108 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 71 எம்எல்ஏக்களும் உள்ளனர். காங்கிரஸை பொறுத்தவரையில் இரண்டு இடத்தில் உறுதியான வெற்றி உள்ளது. மேலும் ஒரு வேட்பாளர் வெற்றி பெற கூடுதலாக 15 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

13 சுயேச்சைகள், இரண்டு ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி உறுப்பினர்கள், பாரதிய பழங்குடியினர் கட்சியின் இரு எம்எல்ஏக்கள், இரண்டு சிபிஎம் எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலனாவர்கள் ஆதரவு காங்கிரஸுக்கு கிடைக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் 3-வது இடத்தில் வெல்ல காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.

பாஜகவை பொறுத்தவரையில் அவர்களுக்கு 30 உபரி வாக்குகள் உள்ளன. கூடுதலாக வெற்றி பெற இன்னும் 11 வாக்குகள் தேவை.

எனவே 4-வது இடத்தில் யார் வெற்றி பெறுவது என்பதில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் முக்கிய பங்கு வகிக்கவுள்ளனர். காங்கிரஸ் சிறிய கட்சிகள் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவை நம்பியுள்ளது. அதேசமயம் பாஜக சுயேச்சைகளை வளைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் தான் சுபாஷ் சந்திரா திடீரென வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மாநிலங்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் இருந்து பாஜக ஆதரவுடன் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள அதிருப்தியையும், அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையிலான சண்டையை பாஜக பயன்படுத்தக் கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில் ‘‘எங்கள் மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். பாஜக சுபாஷ் சந்திராவை களமிறக்கினாலும் அவர்களுக்கு போதிய வாக்குகள் இல்லை. இது அவர்களுக்கே தெரியும். குதிரை பேரம் செய்து மாநிலத்தில் சூழலைக் கெடுக்கலாமா என பாஜக எண்ணுகிறது. ஆனால் அவர்களது எண்ணம் ஈடேறப்போவதில்லை’’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x