Published : 23 May 2022 05:30 PM
Last Updated : 23 May 2022 05:30 PM

கரோனாவுக்குப் பிந்தைய இந்திய - ஜப்பான் ஒத்துழைப்பு இன்றியமையாதது: பிரதமர் மோடி

குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றார்.

புதுடெல்லி: “கரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகில் இந்தியா - ஜப்பான் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக இரு நாடுகளும் உள்ளன” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். தனது அதிகாரபூர்வ ஜப்பான் பயணம் குறித்து, அந்நாட்டின் உள்ளுர் நாளிதழ் ஒன்றில் பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

இதுகுறித்த பிரதமரின் ட்விட்டர் பதிவு: “இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான துடிப்பான உறவுகள் குறித்து எழுதினேன். எங்களிடையேயான உறவு அமைதி, நிலைத்தன்மை, செழுமைக்கான கூட்டு. புகழ்மிக்க 70 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் எங்கள் நட்பின் பயணத்தை நான் கண்டறிந்துள்ளேன்.

கரோனாவுக்குப் பிந்தைய உலகில், இந்தியா - ஜப்பான் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக இருநாடுகளும் உள்ளன. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் நிலையான, பாதுகாப்பான தூண்களாக இரண்டு நாடுகளும் உள்ளன. பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் குஜராத் முதல்வராக இருந்த நாட்களிலிருந்தே ஜப்பானிய மக்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு தொடர்ச்சியாக கிடைத்துள்ளது. ஜப்பானின் முன்னேற்றங்களும், வளர்ச்சியும் எப்போதும் போற்றத்தக்கவை. தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, புதுமை, புதிய தொழில்கள் தொடங்குவது உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஜப்பான், இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவு மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்து பேசுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x