Published : 12 May 2022 02:39 PM
Last Updated : 12 May 2022 02:39 PM

பூஸ்டர் தடுப்பூசி | வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு 9 மாத இடைவெளி கட்டாயமில்லை: மத்திய அரசு

வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி டோஸ் செலுத்திக் கொள்ள இரண்டாவது டோஸ் செலுத்தியதிலிருந்து 9 மாத இடைவெளி இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் தளர்வை வெளிநாடு செல்வோர், மாணவர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 9 மாதங்களுக்குப் பின்னரே முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

ஆனால் ஒரு சில வெளிநாடுகளில் மூன்றாவது மற்றும் முன்னெச்சரிக்கை டோஸுக்கான இடைவெளி குறைவாக உள்ளது. எனவே வெளிநாடு செல்லும் இந்தியர்கள், இந்திய மாணவர்கள் அவர்கள் செல்லும் நாட்டில் என்ன மாதிரியான இடைவெளி பின்பற்றப்படுகிறதோ அதற்கேற்ப மூன்றாவது டோஸை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று தனது கூ ஆப் பக்கத்தில், "இந்தியர்கள், இந்திய மாணவர்கள் அவர்கள் செல்லும் நாட்டில் என்ன மாதிரியான இடைவெளி பின்பற்றப்படுகிறதோ அதற்கேற்ப மூன்றாவது டோஸை செலுத்திக் கொள்ளலாம். இதற்கான வசதி விரைவில் கோவின் (CoWIN) தளத்தில் ஏற்படுத்தப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

தேசிய தடுப்பூசி திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவான நிட்காய் (NITGAI) அனைவருக்குமே முன்னெச்சரிக்கை டோஸுக்கான தடுப்பூசி இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைக்க வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x