Published : 05 May 2022 09:51 AM
Last Updated : 05 May 2022 09:51 AM

காங்கிரஸுக்கு எதிராக வாதாடுவதா? - கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டு சொந்த கட்சியினர் போராட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மேற்கு வங்க மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆஜரான ப. சிதம்பரத்தை அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேற்கு வங்கத்தில் மெட்ரோ டைரி நிறுவனத்தின் பங்குகளை அம்மாநில அரசு தனியார் நிறுவனத்துக்கு விற்றதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் புகாரை கையில் எடுத்து மேற்குவங்க காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கொல்கத்தாவில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதுதொடர்பாக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ஆதிர் சவுத்ரி ரஞ்சன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க அரசிடம் இருந்து பங்குகள் வாங்கிய தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜராகியுள்ளார். காங்கிரஸ் எதிர்தரப்பில் உள்ள நிலையில் கட்சியின் நிலைப்பாட்டை, காங்கிரஸ் வழக்கறிஞர்களுக்கு எதிராக அவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார்.

இதற்கு மேற்குவங்க மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார். அப்போது அவரை காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சூழ்ந்து கொண்டனர். இந்த வழக்கில் ஆஜராக கூடாது என அவரை மறித்தனர். மேலும் அவரை சூழ்ந்து கருப்பு ரிப்பன் காட்டினர். அதோடு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து கொண்டு மக்கள் வரிப்பணத்தை வீணடித்த மேற்குவங்க அரசுக்கு பக்கப்பலமாக உள்ள நிறுவனத்துக்கு ஆதரவாக எப்படி ஆஜராக முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

மம்தா பானர்ஜியின் தரகர் என விமர்சனம் செய்து அவரை எதிர்த்து கடுமையாக கோஷங்ளை எழுப்பினர். இந்த போராட்டத்தின்போது ப. சிதம்பரம் அணிந்திருந்த வழக்கறிஞர்களுக்கான கருப்பு அங்கி பிடித்து இழுக்கப்பட்டது. இதையடுத்து அவர் காரில் ஏறிச் சென்றார். இந்த வழக்கில் ப. சிதம்பரம் முதல் முறையாக நேரில் ஆஜரான நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து மேற்குவங்க காங்கிரஸ் நிர்வாகி கவுஸ்தவ் பாக்ஸி கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதியமைச்சர். தற்போதும் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும், மூத்த தலைவராகவும் உள்ளார். மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிறுவனத்துக்கு ஆதரவாக ப. சிதம்பரம் ஆஜராகிறார். இவர் சாதாரண நபர் இல்லை. இவரது செயல்பாடு கட்சியின் செயல்பாட்டை பாதிக்கும். மேலும் கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு இருப்பதை காட்டும். ஆகவே இதனை ஏற்க முடியாது.

இவ்வாறு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x