Published : 23 Apr 2022 05:10 AM
Last Updated : 23 Apr 2022 05:10 AM

மனவளர்ச்சி குன்றிய பெண் கூட்டு பலாத்காரம்: ஆந்திர அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம், 3 பேர் கைது

விஜயவாடா: மனவளர்ச்சி குன்றிய அப்பாவி பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று, விஜயவாடா அரசு பொது மருத்துவமனையில், கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா வாம்பே காலனி பகுதியை சேர்ந்த 23 வயது மனவளர்ச்சி குன்றிய பெண், கடந்த 19-ம் தேதி மாலை , திடீரென வீட்டிலிருந்து காணாமல் போனார். இது குறித்து, அவரது பெற்றோர் சுன்னா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீஸார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை.

மறுநாள் காலை, பெற்றோரின் போன் எண்ணுக்கு ஒரு மிஸ்ஸுடு கால் வந்துள்ளது. அந்த செல்போன் எண், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (26) என்பவருடையது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர், விஜயவாடா பழைய அரசு பொது மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றுகிறார். அவரை கைது செய்து போலீஸார் விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

கடந்த 19-ம் தேதி மாலை வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி, ஸ்ரீகாந்த்அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், தான் பணிபுரியும் அரசு மருத்துவமனையில், ஒரு இருட்டு அறையில், அந்தப் பெண்ணை அடைத்து வைத்து பாலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் காலை 11 மணிக்கு அப்பெண்ணை அந்த அறையிலேயே விட்டுவிட்டு வீடு திரும்பி விட்டார் ஸ்ரீகாந்த்.

மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த பெண்ணை, அங்குபணியாற்றும் ஊழியர்கள் பாபுராவ் (23), பவன் கல்யாண் (23) ஆகிய இருவரும் அழைத்துச் சென்று அதே இருட்டு அறையில் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

போலீஸார் ஸ்ரீகாந்தை கைதுசெய்து விசாரித்ததும், அப்பெண்ணை தேடுவதில் போலீஸார் அலட்சியம் காட்டியுள்ளனர். இதனால், மருத்துவமனைக்கு சென்று பெற்றோரே கடந்த 20-ம் தேதி முழுவதும் தேடி இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தங்களது மகளை மீட்டனர். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட பவன் கல்யாண், பாபுராவ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

புகார் அளித்ததும் போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் தங்களுடைய பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என காவல் நிலையம் முன் பெற்றோர் கதறி அழுதனர். இவர்களுக்கு தெலுங்கு தேசம், ஜனசேனா, சிபிஎம் மற்றும் பல்வேறு மகளிர் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டுமென கோஷமிட்டனர்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வரும் விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு நேற்று சென்று ஆறுதல் கூறினார். மேலும் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் பேசும்போது, ‘‘இந்த சம்பவம் ஆந்திராவிற்கே இழுக்காகும். ஜெகன் ஆட்சியில் பெண்களுக்கு தக்க பாதுகாப்பு இல்லை. போலீஸாரின் அலட்சிய போக்கும் கண்டிக்கத்தக்கது. அலட்சியமாக நடந்த போலீஸாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அரசு மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரூ.10 லட்சம் நிதி உதவி செய்வதாக முதல்வர் ஜெகன் நேற்று அறிவித்தார். மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கூட்டு பலாத்காரம் செய்த 3 ஒப்பந்த ஊழியர்களின் வேலையும் பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x