Published : 19 Apr 2022 01:43 PM
Last Updated : 19 Apr 2022 01:43 PM

2024-ல் காங்கிரஸ் வெற்றி பெற புதிய வியூகம்: சோனியாவுடன் 3-வது முறையாக பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை 3-வது முறையாக இன்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியுள்ளார். இதில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற புதிய வியூகத்தை பிரசாந்த் கிஷோர் முன் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸில் இணையவில்லை.

அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். அதுமட்டுமின்றி பாஜகவை வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் வெல்லும் திறன் காங்கிரஸுக்கு இல்லை எனவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் பதவிக்கு நேரு குடும்பத்தினரே இருக்க வேண்டிய தேவையில்லை எனவும் காட்டமாக விமர்சித்து வந்தார்.

இதுமட்டுமின்றி காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் அணியை கட்டியமைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் கடந்த சனிக்கிழமை உயர்மட்ட காங்கிரஸ் கூட்டம் நடந்தது. பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அம்பிகா சோனி, திக்விஜியா சிங், மல்லிகார்ஜுன் கார்கே, அஜய் மாக்கன், கே.சி.வேணுகோபால் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் பணியை பிரசாந்த் கிஷோர் கவனிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் தேர்தல்

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக தொழிலதிபர் லியுவா படேல் சமூக தலைவர் நரேஷ் பட்டேல் ஆகியோரில் ஒருவரை முன்னிறுத்த பிரசாந்த் கிஷோர் விரும்புவுதாகவும், இதற்கும் காங்கிரஸ் தலைமை ஒப்புதல் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்ப்பது குறித்து உடனடியாக முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து வருகிறார்.

நேற்று மாலை மிஷன் 2024 திட்டத்துடன் சோனியா காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் மூத்த தலைவர்களான முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி. வேணுகோபால், அம்பிகா சோனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

2024- வெற்றிக்கு வியூகம்

இந்தக் கூட்டத்தில் 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய திட்டம் குறித்து விரிவான அறிக்கையை பிரசாந்த் கிஷோர் முன் வைத்துள்ளார். அதன்படி காங்கிரஸ் 370 இடங்களில் போட்டியிட வேண்டும் என்றும், சில மாநிலங்களில் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். உத்தரபிரதேசம், பிஹார் மற்றும் ஒடிசாவில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும். தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

2024 தேர்தலுக்கு முன்பு காங்கிரஸை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியில் பிரசாந்த் கிஷோர் கூறும் ஆலோசனைகளை ஏற்க காங்கிரஸ் தலைமையும், நேரு குடும்பத்தினரும் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ராகுல் காந்தி மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக தெரிகிறது.

ஆனால் சக்தி வாய்ந்த மாநில தலைவர்களான மம்தா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் சந்திரசேகர் ராவ் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினரிடம் கணிசமான எதிர்ப்பு உள்ளது. இதனால் காங்கிரஸ் தலைமை என்ன முடிவெடுக்கப்போகிறது எனத் தெரியவில்லை.

பிரசாந்த் கிஷோர் முன் வைத்துள்ள திட்டத்துக்கு இந்த மாத இறுதிக்குள் பதிலளிப்பதாக கட்சித் தலைமை பிரசாந்த் கிஷோரிடம் உறுதியளித்துள்ளது. இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் 3-வது முறையாக இன்று சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

இன்றைய கூட்டத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெறும் கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத் தேர்தல்கள் குறித்து இன்றையக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் செய்ய வேண்டிய வியூகம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x