Published : 18 Apr 2022 03:43 PM
Last Updated : 18 Apr 2022 03:43 PM

லக்கிம்பூர் கேரி சம்பவம் | 'ஒரு வாரத்துக்குள் சரணடைய வேண்டும்' - மத்திய அமைச்சர் மகனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆஷிஸ் மிஸ்ரா

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கொடுக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் அவர் சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆஷிஸ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என லக்கிம்பூர் கேரியில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் ஆஷிஸ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்த நீதிபதிகள், ''இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவே நாங்கள் கருதுகிறோம்.

இந்த மனுவின்படி குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை ரத்து செய்ய தகுதியானது. எனவே குற்றம் சாட்டப்பட்டவரின் பிணையை ரத்து செய்து உத்தரவிடுகிறோம். மேலும், அவர் ஒரு வார காலத்துக்குள் சரணடைய வேண்டும்" என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

லக்கிம்பூர் கேரி வன்முறை...

கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி காலை வேளையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உடன் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவந்தனர். அவர்கள் செல்லும் வழியில் கேரி என்ற கிராமத்தில் மத்திய அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர். அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் மகன் வாகனம் புகுந்ததில் 4 விவசாயிகள் உடல் நசுங்கி இறந்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். மொத்தமாக இந்தச் சம்பவங்களில் 8 பேர் வரை உயிரிழந்தனர்.

அமைச்சரின் மகன் இருந்ததாகக் கூறப்படும் கார், விவசாயிகள் மீது ஏறிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. எனினும், இந்தச் சம்பவத்தில் தனது மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறி வந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டதுடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். சிறப்பு புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த அந்த 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் 'லக்கிம்பூர் கேரி சம்பவம் விபத்து கிடையாது. நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தால் செய்யப்பட்ட கொலை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அலகாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதால் ஆஷிஸ் மிஸ்ரா சிறையில் இருந்து வெளிவந்தார்.

இந்நிலையில், ஜாமீனை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x