Published : 10 Apr 2022 05:49 AM
Last Updated : 10 Apr 2022 05:49 AM

ஆந்திராவில் 8 மூத்த அமைச்சர்கள் உட்பட புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் நாளை காலை 11.31 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.

ஆந்திர அமைச்சரவையில் இருந்த 25 அமைச்சர்களில் தொழில்துறை அமைச்சர் கவுதம் ரெட்டி சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். இதனால், 24 அமைச்சர்கள் உள்ளனர். ஆனால், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தான் அறிவித்தபடி, ஆட்சி அமைத்த இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சரியாக பணி செய்யாத அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி 24 அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் வழங்கினர். இந்நிலையில், நாளை காலை 11.31 மணிக்கு வெலகபுடியில் உள்ள தலைமை செயலகத்தில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

அரசு ஆலோசகர் சஜ்ஜல ராமகிருஷ்ணா ரெட்டி, முதல்வர் ஜெகன் வீட்டில் நேற்று காலையும் மாலையும் ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக சஜ்ஜல ராம கிருஷ்ணா ரெட்டி கூறும்போது, “அமைச்சர்களின் இறுதிப் பட்டியல் தயாரான பின்னர், சீல் வைத்த ‘கவர்’ ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி அழைப்பு விடுக்கப்பட்டு, பதவி பிரமாண நிகழ்ச்சிகள் நடைபெறும். அதுவரை எதுவும் கூற இயலாது" என்றார்.

மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர்

ஆனால், மூத்த கட்சி நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள் என 8 முதல் 10 பேருக்கு மீண்டும் புதிய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு 26 மாவட்டங்கள் உதயமானது. ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 26 அமைச்சர்கள் பதவி ஏற்பது உறுதி செய்யப்பட் டுள்ளது.

இதில் ஜாதி வாரியாக பிரிக்கப்பட்டு, அனைத்து பிரிவினரையும் திருப்திபடுத்தும் வகையிலும், வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டும் நன்றாக பணி செய்யும் அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இன்று 10ம் தேதி மாலைக்குள் புதிய அமைச்சர்களின் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x