Published : 28 Apr 2016 03:36 PM
Last Updated : 28 Apr 2016 03:36 PM
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் பேர விவகாரம் தொடர்பாக சோனியா, மன்மோகன் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரும் பொதுநல மனுவை அடுத்த வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.
தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் பானுமதி மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த பொதுநல மனுவை விசாரணைப் பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டது.
வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, இந்த வழக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதையடுத்து அடுத்த வாரத்தில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.
இது தொடர்பாக இத்தாலியைச் சேர்ந்த நிறுவனம் இந்தியர்களுக்கு மிகப்பெரிய தொகையை லஞ்சம் அளித்ததாக 2013-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக இத்தாலியைச் சேர்ந்த பின் மெக்கனிக்கா குழுமத்தின் ஹெலிகாப்டர் பிரிவான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து 12 சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க 2010 பிப்ரவரியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய அரசியல் தலைவர்கள், கடற்படை அதிகாரிகளுக்கு இத்தாலி நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. குறிப்பாக இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட சிலர் மீது குற்றம்சாட்டப் பட்டது. இதுதொடர்பாக இத்தாலியின் மிலன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதுபோல இந்தியாவிலும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் மிலன் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், இந்த விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முன்னாள் நிர்வாக அதிகாரி புரூனோ ஸ்பக்னோலினிக்கு 4 ஆண்டுகளும் பின் மெக்கனிக்கா நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி கியூசெப் ஓர்ஸிக்கு நான்கரை ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சோனியா, மன்மோகன் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக்கோரும் பொதுநல மனுவை அடுத்த வாரம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT