Published : 29 Mar 2022 07:30 AM
Last Updated : 29 Mar 2022 07:30 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: பெட்ரோல் விலை உயர்வு குறித்துவிவாதிக்க அனுமதி மறுத்ததால்எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் மாநிலங் களவை ஒத்திவைக்கப்பட்டது.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், நேற்றுகாலை 6 மணி முதல் மார்ச் 30-ம் தேதி காலை 6 மணி வரை (திங்கள், செவ்வாய்) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று காலையில் மாநிலங்களவை கூடியவுடன், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் பொது வேலைநிறுத்தம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரினர்.

இதற்கு அவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு அனுமதி மறுத்தார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப் பட்டது.

பிரச்சினைகளை விவாதிக்க மறுப்பு

இதையடுத்து அவையில் பூஜ்ஜிய நேரத்தில் கொடுக்கப்பட்ட எந்தவித நோட்டீஸும் விவாதத்துக்கு எடுக்கப்படவில்லை.

காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “பிரதமர் மோடி தலைமையிலான அரசு எந்தவிதமான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கவோ, கருத்துகளை பகிரவோ விரும்பவில்லை. இன்று (நேற்று) காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்தபோது அதைஏற்க அவைத் தலைவர் மறுத்துவிட்டு உடனடியாக அவையை ஒத்திவைத்தார்” என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x