Last Updated : 22 Mar, 2022 05:15 PM

 

Published : 22 Mar 2022 05:15 PM
Last Updated : 22 Mar 2022 05:15 PM

பாஜகவிற்கு வாக்களித்ததால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக முஸ்லிம் பெண் புகார்: முத்தலாக் மிரட்டல் விடுத்ததாக கணவர் மீது உ.பி போலீஸ் வழக்குப் பதிவு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் பாஜகவிற்கு வாக்களித்ததால் ஒரு முஸ்லிம் பெண் தன் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இவருக்கு முத்தலாக் அளிப்பதாக மிரட்டியதாகவும் கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் முஸ்லிம்கள் அதிகமுள்ள மாவட்டம் பரேலி. இதன் பவுண்டியா பகுதியிலுள்ள இஜாஜ்நகரில் தன் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசிப்பவர் உஜ்மா அன்சாரி. இவர், அப்பகுதியின் பாராதாரி காவல் நிலையத்தில் தன் கணவர் மீது கடந்த வாரம் ஒரு புகார் அளித்திருந்தார். கடந்த பிப்ரவரி 14-இல் பரேலியின் நடைபெற்ற உத்தரப் பிரதேச தேர்தலுக்கான வாக்குப்பதிவையொட்டி இந்தச் சம்பவம் இருந்தது. தனது புகாரில் உஜ்மா அன்சாரி குறிப்பிடுகையில், ''வாக்குப்பதிவிற்கு இருதினங்கள் முன்பாக எனது கணவரின் தாய்மாமாவான தையப் அன்சாரி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவர், என்னிடம் சமாஜ்வாதிக்கு வாக்களிக்கும்படி வலியுறுத்திச் சென்றார். பிறகு இதை உறுதிசெய்ய வேண்டி, வாக்குப்பதிவு அன்று மாலை மீண்டும் வீட்டிற்கு வந்தார் தையப் அன்சாரி.

உடன் வந்த எனது கணவரின் சகோதரர் ஆரிப் அன்சாரி, நான் வாக்களித்த கட்சியின் பெயரை கேட்டார். அவரிடம் நான் அவரிடம் பாஜகவிற்கு வாக்களித்ததாகப் பதில் கூறினேன். இதற்கு அக்கட்சி முத்தலாக்கை தடுக்க சட்டம் கொண்டு வந்ததையும், ஏழைகளுக்கு இலவசமாக உணவுப்பொருள்கள் அளிப்பதையும் காரணமாகக் கூறினேன். இதை கேட்டு என் மீது கோபம் கொண்டவர்கள் எனது கணவரிடம் என்னை வீட்டை விட்டு வெளியேற்றும்படி வற்புறுத்தினர். பிறகு தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரைக் காத்திருந்த எனது கணவர், கடந்த மார்ச் 11-இல் என்னை கட்டாயப்படுத்தி வீட்டிலிருந்து வெளியேற்றினார். தொடர்ந்து என்னை முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதாகவும் மிரட்டுகிறார். நான் எவ்வளவு எடுத்துக் கூறியும் கேட்காததால் அவர் மீது புகார் அளிக்க வேண்டியதாயிற்று'' எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த போலீஸார், அந்தப் பெண்ணின் கணவர் தஸ்லீம் அன்சாரி, சகோதரர் ஆரிப் மற்றும் மாமா தையப் ஆகியோரை அழைத்து விசாரணை செய்தனர். இந்த மூவர் மீது வழக்கையும் பதிவு செய்தவர்கள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசால் முத்தலாக் சட்டம் அமலானது. இதையடுத்து, முஸ்லிம் பெண்கள் கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜகவிற்கு ஆதரவளித்து வாக்களித்ததாகக் கருதப்படுகிறது. அதேசமயம், இந்தியாவிலே அதிகமாக உத்தரப் பிரதேசத்தில் முத்தலாக் மீதானப் புகார்கள் பதிவாகி வருகின்றன. இதன் மீதான வழக்குகளில் எந்த ஒரு முஸ்லிமும் இதுவரை தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இச்சூழலில், இந்தமுறை சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திலும் பாஜகவினர் முத்தலாக் சட்டம் கொண்டு வந்ததை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்திருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x