Last Updated : 04 Feb, 2022 09:29 AM

 

Published : 04 Feb 2022 09:29 AM
Last Updated : 04 Feb 2022 09:29 AM

இந்து விரோத விமர்சனங்களால் ஒவைசி வாகனத்தைச் சுட்டோம்: கைதானவர்கள் போலீஸில் வாக்குமூலம் 

லக்னோ: அசாதுதீன் ஒவைசி தொடர்ந்து இந்து மதத்தை விமர்சித்துப் பேசுகிறார். அவரின் இந்து விரோத பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவரது வாகனத்தைச் சுட்டதாக கைதான இருவரும் போலீஸில் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வாகனத்தைக் குறிவைத்து உத்தரப் பிரதேசத்தில் நேற்று துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

"துப்பாக்கிச் சூடு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது" என ஹாப்பூர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அசாதுதீன் ஒவைசி தொடர்ந்து இந்து மதத்தை விமர்சித்துப் பேசுகிறார். அவரின் இந்து விரோத பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைதான இருவரும் போலீஸில் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடந்தது என்ன? உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லி திரும்பிக் கொண்டிருந்தபோது சாஜர்சி டோல் பிளாசா அருகே அவரது வாகனத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று நான்கு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒவைசி சென்ற காரின் டயர்கள் பஞ்சர் ஆகின.இந்த சம்பவத்துக்குப் பின்னர் டோல் பிளாசா அருகே அந்தக் காரை விட்டுவிட்டு, ஒவைசி மற்றொரு காரில் டெல்லிக்கு தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

சம்பவம் தொடர்பாக பேசிய ஒவைசி, "மீரட்டின் கிதாவுரில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து டெல்லிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். சாஜர்சி சுங்கச்சாவடி அருகே வந்தபோது இரண்டு பேர் எனது வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் 3, 4 ரவுண்டுகள் சுட்டனர். அவர்கள் மொத்தம் 3 அல்லது 4 பேர் இருந்தனர். துப்பாக்கிச்சூட்டால் எனது வாகனத்தின் டயர்கள் பஞ்சராக, மாற்று வாகனத்தில் டெல்லி செல்கிறேன். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.

மக்களவையில் இன்று பேசுகிறார்.. இந்நிலையில், தனது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தொடர்பாக ஒவைசி இன்று மக்களவையில் கேள்வி எழுப்புவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதற்கு முன்னதாக அவர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவையும் சந்திக்கவுள்ளார்.

இதற்கிடையில் நாடு முழுவதும் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் இன்று அமைதி வழியில் போராட்டம் நடத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தக் கோரி மனு அளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x