Published : 03 Feb 2022 08:23 PM
Last Updated : 03 Feb 2022 08:23 PM

சாவர்க்கர், நேதாஜி... அச்சத்தால் வரலாற்றை மாற்ற முனையும் அரசு: மக்களவையில் மஹுவா மொய்த்ரா சாடல்

புதுடெல்லி: சாவர்க்கர், நேதாஜி, பகத் சிங் முதலானவர்களை மேற்கோள்காட்டி மக்களவையில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்காலம் குறித்து அச்சப்படுவதன் வெளிப்பாடாகவே இந்திய வரலாற்றை மாற்ற நினைப்பதாக சாடினார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முக்கிய உறுப்பினர்கள் உரையாற்றிவருகின்றனர். நேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேச்சு இந்திய அளவில் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த அதிர்வே இன்னும் அடங்காத நிலையில், இன்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அவையில் பேசிய மஹுவா மொய்த்ரா, "இந்த அரசு, வரலாற்றை மாற்ற நினைக்கிறது. இந்த அரசு தங்களின் எதிர்காலத்தை நினைத்துப் பயப்படுகிறது. ஆனால், நிகழ்காலத்தை இந்த அரசு நம்பவில்லை.

குடியரசுத் தலைவர் தனது உரையின் ஆரம்பத்தில், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி பேசினார். ஆனால், இது வெறும் உதட்டுப் பேச்சு மட்டுமே. உண்மையில் இந்தியாவின் கடந்த கால கண்ணியம், பன்மைத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை இந்த அரசாங்கத்தை மிகவும் பாதுகாப்பற்றதாக ஆக்குகிறது. இதனால் வரலாறுகளை திரித்து வருகிறது. ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது. பாசிசத்தை கடுமையாக எதிர்த்த பகத் சிங்கையும், தான் உள்துறை அமைச்சரான பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்த வல்லபாய் படேலையும் இன்று பாஜக அரசு கையிலெடுத்து, அவர்கள் கொள்கைகளின் வரலாறுகளை மாற்றுகிறது.

குடியரசுத் தலைவர் உரையில் பல சந்தர்ப்பங்களில் நேதாஜியை நினைவுபடுத்தவதைக் கண்டேன். இந்திய அரசாங்கம் அனைத்து மதத்தினரிடமும் நடுநிலையும் பாரபட்சமற்ற அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியவர் அதே நேதாஜிதான் என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும், பாடப்புத்தகங்களில் இருந்து இந்த அரசு அழித்த அதே திப்பு சுல்தானின் புலி சின்னத்தைதான் நேதாஜி தனது இந்திய தேசிய ராணுவத்தின் (INA) சின்னமாக வைத்திருந்தார். நேதாஜி இன்று இருந்திருந்தால் முஸ்லிம் இனப்படுகொலைக்கான அழைப்பு விடுத்த ஹரித்வார் தரம் சன்சாத்தை அப்படி பேச ஒப்புக்கொண்டு இருப்பாரா?

நேதாஜியின் ஐஎன்ஏவின் பொன்மொழிகள் மூன்று உருது வார்த்தைகள்: எதிஹாத், எட்மாட் மற்றும் குர்பானி . இதன் அர்த்தம்... ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் தியாகம் ஆகும். இதே உருது மொழியை மாற்றி ஜம்மு காஷ்மீரின் முதல் மற்றும் அதிகாரபூர்வ மொழியாக இந்தியை கொண்டுவர முயல்கிறது.

நம் அனைவரையும் எதிர்கொள்ளும் மிக முக்கியமான கேள்வியைக் கேட்க நான் இன்று இங்கு நிற்கிறேன். நாம் விரும்பும் குடியரசு என்ன, இன்று நாம் விரும்பும் இந்தியா என்ன? நம்முடையது ஓர் உயிருள்ள அரசியலமைப்பு, நாம் அதில் உயிரை சுவாசிக்கத் தயாராக இருக்கும் வரை அது சுவாசிக்கிறது. இல்லையெனில், இது கருப்பு மற்றும் வெள்ளை காகிதத்தின் ஒரு துண்டாக மாறிவிடும். அதே காகிதத் துண்டு எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கத்தாலும் சாம்பல் நிற நிழல்களாக மாற்றப்படலாம்.

இந்த நாட்டிற்கு மாற்றம் தேவையா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு, மக்களாகிய எங்களிடமே உள்ளது. அதை நீங்கள் தேர்வு செய்ய முடியாது.

தனது சொந்த குடிமக்களை உளவு பார்க்க தொழில்நுட்பத்தை வாங்குவதற்கு வரி செலுத்துவோர் பணத்தை செலவழித்த ஒரே அரசு இதுதான். வேளாண் சட்டங்களைக் கொண்டு வர வேண்டாம் என்று உங்களிடம் பலமுறை கூறிய எங்கள் விவசாயிகளை நீங்கள் நம்பவில்லை. அவற்றை நீங்கள் திரும்பப் பெற்றாலும், மேற்கு உ.பி.-யில் 70 இடங்களை இழக்க நேரிடும் என்ற உங்கள் பயம் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்காக நீங்கள் உணர்ந்த வருத்தத்தை விட அதிகம் என்று நான் நினைக்கிறேன்.

உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 142வது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் அர்த்தம் இன்று பத்திரிகையாளர்களுக்கு உலகளவில் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது என்பதாகும். இந்த அரசு நம் குடியரசின் ஆன்மாவையே நம்பவில்லை. அதனால்தான் ஆதார் அட்டையுடன் வாக்குரிமையை இணைக்கும் சட்டத்தை கொண்டுவருகிறார்கள்" என்று ஆவேசமாக பேசினார் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.

முன்னதாக, இன்று காலை "பாஜகவினரே, கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்க்கும் உங்களுடைய தாக்குதல் படையைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" என்று தனது உரைக்கு ட்விட்டரில் பாஜகவிடம் சவால் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x