Published : 26 Jan 2022 06:02 PM
Last Updated : 26 Jan 2022 06:02 PM

3 ஆண்டுகளாக ஆஜராகாத அரசு வக்கீல் - அட்டப்பாடி மது கொலை வழக்கின் நிலை என்ன?

அட்டப்பாடி பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலைச் செய்யப்பட்ட வழக்கில் நான்கு வருடங்கள் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது. கடந்த 2018ல் பலசரக்குக் கடையிலிருந்து அரிசியைத் திருடினார் என்று குற்றம்சாட்டப்பட்டு அந்தப் பகுதி மக்களால் அடித்துத் மது போலீஸாரால் மீட்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட வழியிலேயே இரத்தம் கக்கி இறந்தார். தாக்குதலில் சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவரே மதுவை தாக்கும் சம்பவத்தைச் செல்ஃபி எடுத்து வலைதளங்களில் பதிவேற்றினார். பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த மதுவின் வயிற்றில் ஒரு பருக்கைகூட உணவில்லை என்று வந்தது.

இந்தியாவை உலுக்கிய இந்த சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு 3,000 பக்க குற்றப்பத்திரிகையை மே 2018 இல் தாக்கல் செய்தது, அதில் 16 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது கொலை மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. என்றாலும், இந்த வழக்கில் இதற்கடுத்து பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை என கொலையுண்ட மதுவின் தாய் தெரிவித்துள்ளார்.

"கொலை நடந்து நான்கு வருடங்கள் ஆக போகிறது. இன்னும் ஏன் விசாரணையை ஆரம்பிக்கவில்லை என்று தெரியவில்லை. கேட்டால், காவல்துறையினர் வெவ்வேறு காரணங்களை அடுக்கிறார்கள். என்னிடம் பணமோ செல்வாக்கோ இல்லை. குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நபர்களும் இங்கே இத்தனை ஆண்டுகளாக சுதந்திரமாக திரிகிறார்கள். யாரை சந்தித்து நியாயம் கேட்பது என்று தெரியவில்லை" என்று மதுவின் தாய் மல்லி வழக்கின் நிலையை கூறுகிறார்.

இந்த வழக்கு மன்னார்க்காடு எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதனாலேயே விசாரணை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நேற்று நடத்தப்பட்டது. ஆனால் நேற்றும் விசாரணைக்கு ​​அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. மதுவுக்கு ஆதரவாக வாதாட நியமிக்கப்பட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் ஒரு வாரத்திற்கு முன்பு பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது பின்னரே தெரியவந்தது. இதனால் வழக்கு வரும் பிப்ரவரி 26-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முந்தைய சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி வழக்கு விசாரணையை அரசுத் தரப்பு தாமதமாக்கியதாக ஏற்கனவே மதுவின் தாய் புகார் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில், கேரள அரசு வழக்கறிஞர் பி கோபிநாத்தை சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஆனால், அட்டப்பாடியில் தற்காலிக தங்குமிடம் மற்றும் அலுவலகம் போன்ற சிறப்பு வசதிகள் வேண்டும் என அவர் அரசுக்கு வைத்த கோரிக்கை ஏற்கப்படாததால் ராஜினாமா செய்தார்.

பின்னர் ஆகஸ்ட் 2019ல் வி.டி.ரகுநாத் என்பவர் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த மூன்று ஆண்டுகளில் அவர் இதுவரை மன்னார்க்காடு நீதிமன்றத்தில் ஆஜராகியதில்லை. அவரின் ஜூனியர்களே இதுவரை ஆஜராகி வந்தனர். இறுதியாக நேற்று கேட்டதற்கு ராஜினாமா செய்துவிட்டதாக தெரிவித்துவிட்டார். உடல்நலத்தை காரணம் காட்டி ராஜினாமா செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும் விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமான டிஜிட்டல் ஆதாரங்களை கேட்டபோதும் ரகுநாத் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பொதுவாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வழக்கின் ஆதாரங்கள் ஒப்படைக்ககூடாது. இந்த அடிப்படை காரணத்தை சொல்லிக்கூட அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனிடையே, நேற்று அரசு தரப்பு வழக்கறிஞர் தொடர்பாக சிறப்பு நீதிபதிகள் கேரள அரசை கடுமையாக எச்சரித்ததை அடுத்து புதிய சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என்று அரசுத் தலைமை இயக்குநர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு, ஆரம்பத்திலிருந்தே பின்னடைவை சந்தித்து வருவதற்கு அரசியல் செல்வாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லப்படுகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெரும்பாலோனோர் ஆளும் சிபிஎம் கட்சியின் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் என்பது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஷம்சுதீன் கடந்த செப்டம்பரில் தான் சிபிஎம் கிளைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்ப அந்த முடிவு கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x