Published : 23 Jan 2022 07:32 PM
Last Updated : 23 Jan 2022 07:32 PM

என்னைக் கைது செய்து கொள்ளுங்கள்; ஆனால் நாங்கள் பின்வாங்க மாட்டோம்:  ஆம் ஆத்மி அமைச்சர் பேச்சு

என்னைக் கைது செய்து கொள்ளுங்கள்; ஆனால் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் தேர்தலை ஒட்டி ஆம் ஆத்மி கட்சி அங்கே தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அம்மாநிலத் தேர்தல் குறித்து வெளியாகும் கருத்துக் கணிப்புகளும் கூட பாஜகவைவிட ஆம் ஆத்மி அதிக வாக்குகளைப் பெறும் எனக் கூறுகின்றன.

இந்நிலையில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, இன்னும் சில நாட்களில் அமலாக்கத்துறையை ஏவி எங்களின் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினை கைது செய்யத் திட்டமிடப்படுவதாகத் தகவல் வந்துள்ளது என்று கூறினார்.

இந்நிலையில், பஞ்சாபில் பிரச்சாரக் களத்தில் உள்ள சத்யேந்திர ஜெயின், எங்களுக்குக் கிடைத்தத் தகவலின்படி பஞ்சாப் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கத் துறை என்னை கைது செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. அவர்களை வரவேற்கிறேன்.

இத்தகைய ரெய்டு நடவடிக்கைகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சானி வேண்டுமானால் இதற்கெல்லாம் அஞ்சுவார். நாங்கள் அவரைப் போல் தவறேதும் செய்யவில்லை. அதனால் எங்களுக்கு அச்சமும் இல்லை. நானும், மனீஷ் சிசோதயாவும் ஏற்கெனவே ரெய்டுகளை சந்தித்துள்ளோம். ஆம் ஆத்மியின் 21 எம்எல்ஏ.,க்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், எப்போது வேண்டுமானாலும் கைது செய்ய வரலாம். இது வெறும் அரசியல் தான். இதைத் தான் பஞ்சாப் தேர்தலுக்கு முன்னதாகவும் செய்தனர். நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.

பஞ்சாப் மாநிலத்துக்கு வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே தான் போட்டி நிலவுவதாக அரசியல் கணிப்புகள் கூறுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x