Published : 18 Jan 2022 06:38 AM
Last Updated : 18 Jan 2022 06:38 AM

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் பிரிந்து யூடியூப் உதவியால் 74 ஆண்டுக்கு பிறகு இணைந்த சகோதரர்கள்

லாகூர்: இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையில் பிரிந்து சென்று, 74 ஆண்டுகளுக்கு பிறகு யூடியூப் சேனலின் உதவியால் இரு சகோதரர்கள் இணைந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

பாகிஸ்தானின் பைசாலாபாத் தைச் சேர்ந்தவர் நசீர் தில்லான். இவர் ‘பஞ்சாப் லேஹ்ர்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்து சென்று தற்போது இரு நாடுகளில் வசித்து வரும் குடும்பங்கள், நண்பர்களை ஒன்று சேர்ப்பதே இந்த சேனலின் பிரதான நோக்கமாகும். இந்த சேனல் மூலம் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்துள்ளன

இந்நிலையில், இந்த சேனலில்கடந்த 2019-ம் ஆண்டு பாகிஸ்தானின் பைசாலாபாத் பகுதியைச் சேர்ந்த சாதிக் கான் (84) என்பவரின் பேட்டி ஒளிபரப்பானது. அதில், அவர், பிரிவினையின்போது பஞ்சாபின் புலேவாலில் இருந்த தனது தாய், தம்பி, தங்கையை பிரிந்து சென்ற கதையை உருக்கமாக கூறியிருந்தார்.

இந்நிலையில், சாதிக் கானின் இந்தக் கதையை கேட்ட புலேவால் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அவர் கூறிய பெயர்களுடன் இருக்கும் நபர்களை தேடத் தொடங்கினார். இதில், சாதிக் கானின் தம்பி சிக்கா கானை அந்த இளைஞர் கண்டுபிடித்தார். பின்னர், இதுகுறித்து பஞ்சாப் லேஹ்ர் யூடியூப் சேனல் நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, இரு நாடுகளையும் இணைப்பதற்காக புதிதாக திறக்கப்பட்ட கர்த்தார்பூர் வழித்தடத்தில் சகோதரர்களான சிக்கா கானையும், சாதிக் கானையும் சந்திக்க வைக்க அந்த யூடியூப் சேனல் முயன்றது. எனினும், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அது முடியவில்லை.

இந்நிலையில், 74 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற சகோதரர்கள் சாதிக் கானும், சிக்கா கானும் கடந்த வாரம் கர்த்தார்பூர் வழித்தடத்தில் சந்தித்தனர். அப்போது இருவரும் கண்ணீர் மல்க கட்டிப்பிடித்து ஒருவர் மீது ஒருவர் அன்பை பொழிந்தது நெகிழச் செய்வதாக இருந்தது.

இதுகுறித்து சாதிக் கான் கூறு கையில், “பிரிவினையின்போது எனக்கு 10 வயது இருக்கும். எனது சகோதரன் சிக்கா கான் ஒன்றரை வயது குழந்தை. தங்கைக்கு 4 வயது. அப்போது திடீரென ஒரு நாள் இரவு எங்கள் பகுதியில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, உயிரைகாப்பாற்றிக் கொள்ள எனது தந்தைஎன்னை தூக்கிக் கொண்டு பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்துவிட்டார். இந்தியாவில் எனது தாய், தங்கை, தம்பி சிக்கிக் கொண்டனர்.

பின்னர், அவர்கள் என்ன ஆனார்கள் என்றே எங்களுக்கு தெரியாது. இத்தனை வருடங்கள் கழித்து எனது சகோதரன் சிக்கா கானை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிக்கா கானை பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்ல விசா வழங்கு மாறு பாகிஸ்தான் அரசிடம் கேட்டுள்ளேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x