Published : 11 Jan 2022 06:40 AM
Last Updated : 11 Jan 2022 06:40 AM
புதுடெல்லி: ராணுவத்தில் வீரர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு அவர்களை அதிகாரிகள் நியாயமாக நடத்த வேண்டும் என்று ஆயுதப் படைகள் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2017 டிசம்பர் 17-ல்ராணுவத்தில் சேர்க்கப்பட்ட வீரர் ஒருவர், பயிற்சிக் காலத்தில் நீண்டகாலம் இல்லாததால் ஓராண்டுக்குப் பிறகு பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிராக அந்த வீரர் ஆயுதப் படைகள் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “பயிற்சியின்போது பயிற்சியாளர் கன்னத்தில் அறைந்ததில் ஏற்கெனவே காயம்அடைந்த வலது கண் பாதிக்கப்பட்டது. ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைக்கு செல்ல அதிகாரிகள் அனுமதிக்காததால் பாதிப்பு குணம் அடையவில்லை.
இதனால் பயற்சியில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே கண்ணுக்கு சிகிச்சை பெற சொந்த ஊருக்கு சென்றேன். இதன் பிறகு பயிற்சி மையத்துக்கு சென்று பணியில் சேர்ந்துவிட்டேன். என்றாலும் பயிற்சிக்கு வராமல் இருந்ததற்காக 2018 டிசம்பர் 1-ம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டேன்” கூறியிருந்தார். இந்த மனுவை ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தின் லக்னோ அமர்வு விசாரித்தது. இதில் அந்த வீரரை மீண்டும் ராணுவத்தில் சேர்க்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பாயம் தனது உத்தரவில், “மனுதாரர் ராணுவத்தில் பணியாற்ற விரும்புகிறார். தேர்வு செய்யப்பட்ட ஒருவருக்கு முழு வாய்ப்பு வழங்கினால் மட்டுமே அவரால் நாட்டுக்கு சேவையாற்ற முடியும். அதிகாரிகள் – வீரர்கள் இடையே நம்பிக்கை குறைவு இருக்கக் கூடாது. அதிகாரிகள் தனக்கு கீழ் பணியாற்றுவோரை நியாயமாக நடத்த வேண்டும். இதன் மூலம் மட்டுமே தங்கள் மீது அதிக நம்பிக்கையை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இது ஓரு வீரரை போர்க்காலத்தில் தங்கள் அதிகாரியை ஹீரோவாக பார்க்க வைக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT