Published : 10 Jan 2022 06:53 AM
Last Updated : 10 Jan 2022 06:53 AM

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு நடுவிலும் கர்ப்பிணியை ஸ்ட்ரெச்சரில் சுமந்தவாறு மருத்துவமனையில் சேர்த்த ராணுவ வீரர்கள்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

காஷ்மீரின் சோபியான் மாவட்டம், ராம்நகரியில் கர்ப்பிணியை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிச் செல்லும் சைனார் கார்ப்ஸ் ராணுவ வீரர்கள். படம்: பிடிஐ

புதுடெல்லி: கடும் பனிப்பொழிவுக்கு இடையேகர்ப்பிணியை ஸ்ட்ரெச்சரில் வைத்து சுமந்தவாறு மருத்துவமனையில் சேர்த்த ராணுவவீரர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஜம்மு-காஷ்மீரின் சோபியானில் செயல்படும் சைனார் கார்ப்ஸ் என்ற ராணுவப் பிரிவுக்கு ராம்நகரி பகுதியிலிருந்து நேற்று முன்தினம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், அங்குள்ள ஒருகர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்க்க உதவி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அப்போது கடும் குளிரும், அதிக பனிப்பொழிவும் இருந்தது. ஆனால்அதையெல்லாம் பொருட்படுத்தாத ராணுவ வீரர்கள் உடனடியாக ராம்நகரி பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு பிரசவ வேதனையில் தவித்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் சுமந்து சென்று சோபியான் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்தப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தகவலை சைனார்கார்ப்ஸ் ராணுவப் பிரிவு தனதுட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இதைப் பார்த்த பொதுமக்கள் சைனார் ராணுவப் பிரிவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x