Published : 08 Jan 2022 11:56 AM
Last Updated : 08 Jan 2022 11:56 AM

தேசிய தண்ணீர் விருது; தமிழகத்துக்கு 3-ம் பரிசு: மதுரை மாநகராட்சி, செங்கல்பட்டு ஊராட்சிக்கும் விருதுகள் அறிவிப்பு

புதுடெல்லி: தேசிய தண்ணீர் விருது வரிசையில் சிறந்த மாநிலங்களுக்கான பிரிவில் தமிழ்நாட்டிற்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது

3-வது தேசிய தண்ணீர் விருதுகளை, மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அறிவித்தார். 2020-ம் ஆண்டுக்கான இந்த விருதில், நீர்வளத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கான சிறந்த மாநிலங்களுக்கான பிரிவில், தமிழ்நாட்டிற்கு மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவில் உத்தரப்பிரதேசம் முதல்பரிசையும், ராஜஸ்தான் இரண்டாம் பரிசையும் பெறுகின்றன. தென் மாநிலங்களில், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த கிராமப் பஞ்சாயத்துக்கான பிரிவில், செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புத்தூர் ஊராட்சி 2-ம் பரிசையும், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரிவில், மதுரை மாநகராட்சி 3-வது பரிசையும் பெற்றன.

சிறந்த பள்ளிக்கூடங்களுக்கான பிரிவில், காவேரிப்பட்டிணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், புதுச்சேரி, அமலோற்பவம் லூர்து அகாடமி 2-ம் பரிசையும், புதுச்சேரி மனப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி 3-ம் பரிசையும் பெற உள்ளன.

சிறந்த தொழிற்சாலைகளுக்கான பிரிவில், தமிழ்நாட்டில் உள்ள ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் (ஹுண்டாய் கார் தொழிற்சாலை)-க்கு இரண்டாம் பரிசும், சிறந்த தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா-வுக்கு 2-ம் பரிசும் வழங்கப்பட உள்ளது.

விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ‘‘வாழ்க்கைக்கு தண்ணீர் மிகவும் அடிப்படையானது. இந்தியாவின் தற்போதைய தண்ணீர் தேவை, ஆண்டுக்கு சுமார் 1,100 பில்லியன் கன மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2050-ம் ஆண்டு வாக்கில், 1,447 பில்லியன் கன மீட்டராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடான இந்தியாவிற்கு, தண்ணீர் வளம் மிக முக்கியமானது. உலகின் மொத்த மக்கள் தொகையில் 18% பேர் இந்தியாவில் வசிக்கும் நிலையில், உலகின் புதுப்பிக்கத்தக்க தண்ணீர் வளத்தில் 4% தான் இந்தியாவில் உள்ளது.

தண்ணீர் சுழற்சியில், மேற்பரப்பில் கிடைக்கும் தண்ணீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகிய இரண்டும் ஒருங்கிணைந்த அங்கம் என்பதால், ஒன்றுபட்ட தேசிய தண்ணீர் விருதை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே இந்த விருதுகள் ஏற்படுத்தப்பட்டது’’ என மத்திய அமைச்சர் ஷெகாவத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x