Published : 26 Apr 2016 08:16 AM
Last Updated : 26 Apr 2016 08:16 AM
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சூறையாடப்பட்ட திருக்குறள் மன்றத்தின் நூலகத்தை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் கோ.செழியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக தமிழக அரசுக்கு விரைவில் அறிக்கை அளிக்க இருப் பதாகவும் அவர் தெரிவித்தார்.
பெங்களூருவில் உள்ள அல்சூரில் 50 ஆண்டுகள் பழமையான திருக்குறள் மன்ற நூலகம் கடந்த 21-ம் தேதி சூறையாடப்பட்டது. இதில் இருந்த சுமார் 20 ஆயிரம் நூல்களும் அரிய ஆவணங்களும் தூக்கி வீதியில் வீசப்பட்டன.
இது தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த அல்சூர் போலீஸார் நூலகத்தை சூறையாடிய சரஸ்வதி சபாவின் தலைவர் பிரபு என்பவரை கைது செய்தனர்.
இந்நிலையில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் கோ.செழியன் நேற்று பெங்களூரு வந்து சூறையாடப்பட்ட நூலகத்தை பார்வையிட்டார். நூலகத்தின் அமைப்பாளர் நல்ல பெருமாள் மற்றும் கர்நாடக தமிழ் அமைப்பின் நிர்வாகிகளையும் ஆர்வலர்களையும் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார்.
இது தொடர்பாக கோ. செழியன் கூறுகையில், ''பெங்களூருவில் நூலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக விரைவில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக தமிழக அரசுக்கு விரிவான அறிக்கை அளிக்கப்படும். இதை யடுத்து நூலகத்தை புனரமைப்பது, மீண்டும் செயல்பட வைப்பது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்'' என தெரிவித்தார்.
இதையடுத்து நூலக அமைப்பாளர் நல்ல பெருமாள் கர்நாடக தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பெங்களூருவின் பழமையான நூலகங்களில் ஒன்றான திருக்குறள் மன்ற நூலகத்தை மீண்டும் புனரமைக்க கர்நாடக அரசும் தமிழக அரசும் உதவ முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT