Published : 05 Jan 2022 06:01 PM
Last Updated : 05 Jan 2022 06:01 PM

கரோனா பூஸ்டர் டோஸ்; மாறுபட்ட தடுப்பூசி செலுத்தலாமா?- மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பொறுத்தவரையில் முதல் இரண்டு டோஸ் எந்த வகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதே வகை தடுப்பூசியே செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது.

இது தொடர்பாக அண்மையில் மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 2022 ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசியும், 10-ம் தேதி முதல் இணைநோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படும் என அறிவித்தார்.

மத்திய அரசின் தடுப்பூசி தொழில்நுட்பக் குழு பூஸ்டர்அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் எத்தனை மாத இடைவெளியில் செலுத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பெரும்பாலும் மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன.

இதில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு முன்னெச்சரி்க்கை தடுப்பூசி செலுத்த கால இடைவெளி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 2-டோஸ் தடுப்பூசி செலுத்தியபின் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்த குறைந்தபட்சம் 9 முதல் 12 மாத இடைவெளி தேவைப்படும் என்று கூறப்படுகிறது

இந்தநிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறியதாவது:

பூஸ்டர் தடுப்பூசி டோஸ் மூன்றாவது டோஸாக வழங்கப்படும். முதல் இரண்டு டோஸ் எந்த வகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதே வகை தடுப்பூசியே செலுத்த வேண்டும். அதாவது கோவிஷீல்டை முதல் மற்றும் இரண்டாவது டோஸாகப் பெற்றவர்கள் மூன்றாவது டோஸாக கோவிஷீல்டைப் பெறுவார்கள்.

இதேபோல், முதல் இரண்டு டோஸ்களில் கோவாக்சின் பெற்றவர்கள் மூன்றாவது டோஸில் கோவாக்ஸின் பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x