Published : 04 Jan 2022 06:46 PM
Last Updated : 04 Jan 2022 06:46 PM

டெல்லியில் 24 மணிநேரத்தில் 5,481 பேருக்கு கரோனா தொற்று; மே மாதத்தை தொடும் பாதிப்பு விகிதம்

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,481 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு விகிதம் கடந்த மே மாத அளவை எட்டியுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துவருகிறது. கடந்த அக்டோபர் மாதத்துக்குப்பின் தினசரி தொற்று 20 ஆயிரத்துக்குமேல் சென்றுள்ளது. இதில் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவலும் இருப்பதால் பரவல் அதிகரித்து வருகிறது.

டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்துள்ளது. இரவுநேர ஊரடங்கு, பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது.

டெல்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கோவிட்-19 பரவுவதை கட்டுப்படுத்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை விதிக்க முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,481 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,889 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இறப்பு எண்ணிக்கை 25,113 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம், நேர்மறை விகிதம் 8.37 சதவீதமாக உயர்ந்தது. கடந்த ஆண்டு மே 17 முதல், 8.42 சதவீதமாக இருந்தது. டெல்லியில் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 14,63,701 ஐ எட்டியுள்ளது. இறப்பு விகிதம் 1.72 சதவீதமாக உள்ளது.

531 நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் வென்டிலேட்டர் உதவியுடனும், 168 நோயாளிகள் ஆக்சிஜன் ஆதரவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 308 நோயாளிகள் அறிகுறியற்றவர்கள் அல்லது லேசான அறிகுறிகள் உள்ளவர்களாக உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x