Published : 01 Jan 2022 06:54 PM
Last Updated : 01 Jan 2022 06:54 PM

உலகை உலுக்கும் கரோனா; தற்காலிக மருத்துவமனைகளை தயார் செய்யுங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் மாறுபாடு உலகளவில் ஆயிரக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளிலும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 1,431 ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 454 பேருக்கும், அடுத்தபடியாக டெல்லியில் 320 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 118 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,775 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கரோனா தொற்று சுகாதார உள்கட்டமைப்பு விரைவில் அழுத்தத்துக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளதால் ஆக்சிஜன் கிடைப்பதைக் கண்காணிக்குமாறும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவற்றின் சுகாதார உள்கட்டமைப்பை உடனடியாகக் கணக்கிடுமாறு மத்திய அரசு இன்று கடிதம் எழுதியுள்ளது. மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

மருத்துவமனைகளில் அதிக படுக்கைகளைச் உருவாக்குவது, சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளை அதிகரிப்பது தவிர, மாநிலங்கள் அவற்றின் ஆக்சிஜன் இருப்பை எச்சரிக்கையுடன் சரிபார்க்க வேண்டும். உலகம் தற்போது கோவிட் -19 தொற்று எண்ணிக்கை மிக உயர்ந்து வருகிறது. ஒமைக்ரானின் பரவலின் பின்னணியில், உலகம் தற்போது கோவிட்-19 எண்ணிக்கை அதிகரிப்பால் பெரும் இன்னல்களை சந்திக்கிறது.

இந்தியாவில், டிசம்பர்- 31 அன்று 16,764 என்ற எண்ணிக்கை பதிவாகியுள்ள நிலையில், இதன் போக்கும் மேல்நோக்கிய போக்கைக் காட்டுகிறது. கடந்த 70 நாட்களில் எப்போதும் ஒரே நாளில் அதிகரிப்பு. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல வளர்ந்த நாடுகள் கடந்த சில வாரங்களில் புதிய தொற்று எண்ணிக்கை குறிப்பிடத்தக்க உயர்வைப் பதிவு செய்கின்றன, இது வைரஸின் அதிக பரவலைக் குறிக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு ஹோட்டல் தங்குமிடங்களையும் மாநிலங்கள் பயன்படுத்தலாம், இது சில மாநிலங்களில் முந்தைய எழுச்சிகளின் போது செய்யப்பட்டது என்று அது கூறியது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளைக் கண்காணிக்க, மாநிலங்கள் சிறப்புக் குழுக்கள், அழைப்பு மையங்கள், கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க வேண்டும். கிராமப்புறப் பகுதிகள் மற்றும் குழந்தைகளுக்கான தொற்று குறித்தும் தெளிவான கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மாநிலத்தில் உள்ள அனைத்து சுகாதார வசதிகளிலும் தேவையான மருத்துவப் பொருட்கள், ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருந்துகள் போதுமான அளவு கிடைப்பதை மாநிலங்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x