Published : 30 Dec 2021 05:55 PM
Last Updated : 30 Dec 2021 05:55 PM

சென்னை உள்ளிட்ட நகரங்களில் 4 நாட்களில் கரோனா தொற்று அதிகரிப்பு: மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் சென்னை உள்ளிட் நகரங்களில் 3-4 நாட்களில் கோவிட் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும், 22 மாவட்டங்களில் நிலைமை எச்சரிக்கும் வகையில் இருப்பதாகவும், ஆனால் பீதி அடைய தேவையில்லை, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறினார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் மாறுபாடு உலகளவில் ஆயிரக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளிலும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் இந்தியாவில் 3-4 நாட்களில் கோவிட் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும், 22 மாவட்டங்களில் நிலைமை எச்சரிக்கும் வகையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி, மும்பை, புனே, தானே, பெங்களூரு, சென்னை, குர்கான், அகமதாபாத், நாசிக் ஆகிய நகரங்களில் கரோனா தொற்று திடீர் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நாடுதழுவிய அளவில் கோவிட்-19 நிலைமை குறித்து அமைச்சகத்தின் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசும்போதும் இதனை தெரிவித்தார். கவலைக்குரிய பகுதிகளாக உள்ள மாவட்டங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

டிசம்பர் 26 முதல் இந்தியாவில் தினசரி கோவிட் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. இந்தியாவின் கோவிட்-19 நிலைமை மற்றும் தடுப்பூசிகள் குறித்து சுகாதார அமைச்சகம் கூறியதாவது:

1. கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்கள் செயலில் உள்ள கோவிட் வழக்குகள் அதிகம்.

2. இந்தியாவில் உள்ள எட்டு மாவட்டங்கள் 10%க்கும் அதிகமான வாராந்திர நேர்மறை விகிதம் உள்ளது. அவற்றில் 6 மிசோரத்திலும், 1 அருணாச்சலப் பிரதேசத்திலும், 1 மேற்கு வங்கத்திலும் காணப்படுகிறது.

3. கேரளாவில் 6, மிசோரமில் 4, அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், ஜார்கண்ட் மற்றும் மணிப்பூரில் தலா 1 உட்பட, இந்தியாவில் உள்ள 14 மாவட்டங்கள் 5% முதல் 10% வரை வாராந்திர நேர்மறை விகிதம் பதிவு செய்துள்ளது.

4. வைரஸ் மாற்றமடைந்து வருகிறது, இது பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

5. நோய்த்தொற்றுக்குப் பிந்தைய நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி ஐசிஎம்ஆர் டாக்டர் பல்ராம் பார்கவா கூறுகையில் ‘‘நோய்த்தொற்றுக்குப் பிந்தைய நோய் எதிர்ப்பு சக்தி சுமார் ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கும்’’ என்றார்.

தடுப்பூசிக்குப் பிந்தைய நோய் எதிர்ப்பு சக்தியும் சுமார் 9 மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் டாக்டர் பார்கவா கூறினார்.

6. ஆர்- மதிப்பு 1.22 என்ற எண்ணத்தில் உள்ளது. ஆர்-மதிப்பு என்பது வைரஸின் பரவலைக் குறிக்கிறது. 1.22 இன் மதிப்பு 100 பாதிக்கப்பட்டவர்கள் 122 பேருக்கு தொற்றுநோயைப் பரப்புவதாக தெரிகிறது.

7. இந்தியாவில் கோவிட் எண்ணிக்கை உயர்வு என்பது உலக அளவில் ஒமைக்ரான் அதிகரித்து வருவதன் ஒருபகுதியாக இருக்கலாம் எந்தவொரு பாதிப்பையும் சமாளிக்க நாடு தயாராக இருப்பதால் பீதி அடையத் தேவையில்லை என்று டாக்டர் பால் கூறினார்.

8) தேவைக்கேற்க 144 தடை உத்தரவையும், இரவு நேர ஊரடங்கையும் மாநில அரசுகள் அமல்படுத்தலாம்.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x