Published : 28 Dec 2021 07:42 AM
Last Updated : 28 Dec 2021 07:42 AM

வருமான வரி சோதனையில் ரூ.284 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்: கைதான உ.பி. தொழிலதிபருக்கு 14 நாள் காவல்

கான்பூர்: உத்தரபிரதேச தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீடுகளில் இருந்துஇதுவரை ரூ.284 கோடி பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர் பியூஷ் ஜெயின். இவர் ஓடோகெம் இன்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் வாசன திரவியங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கான்பூர், மும்பை, குஜராத், துபாய் உட்பட பல்வேறு நகரங்களில் அவருக்கு அலுவலகங்கள் உள்ளன.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமான பியூஷ் ஜெயின், ஜிஎஸ்டி, வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்தன. இதன்பேரில் வருமான வரித் துறை அதிகாரிகள், ஜிஎஸ்டி புலனாய்வு துறை (டிஜிஜிஐ) அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

கன்னோஜில் உள்ள அவரது பூர்விக வீடு, கான்பூர் வீட்டில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கான்பூர் வீட்டில் ரூ.177 கோடி, கன்னோஜ் வீட்டில் ரூ.107 கோடி என இதுவரை ரூ.284 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 25 கிலோ தங்க நகைகளும் 250 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்துஆவணங்களும் கைப்பற்றப்பட் டுள்ளன.

இதுகுறித்து வருமான வரித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

பியூஷ் ஜெயினின் கான்பூர்,கன்னோஜ் வீடுகளில் சிசிடிவிகேமராக்கள் பொருத்தப்படவில்லை. வீட்டுக்கு யார் வந்து செல்கிறார்கள், வீட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியக்கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராக் களை பொருத்தவில்லை.

பீரோ, அலமாரிகளில் பணம் வைக்கப்படவில்லை. சுவர்கள், மேற்கூரைகள், மாடி படிக்கட்டுகள், குழாய்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. படுக்கை அறை சுவர்கள், மேற்கூரைகளை இடித்து பணத்தை மீட்டுள்ளோம். சந்தேகத்துக்குரிய சுவர்கள், மேற்கூரைகள் தொழிலாளர்கள் மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகளாக பியூஷ்ஜெயின் புதிதாக எந்த தொழிலையும் தொடங்கவில்லை. அவரது தொழிலில் மிகப்பெரிய அளவில் லாபம் கிடைத்திருப்பதாக தெரியவில்லை. இதுவரை ரூ.284 கோடியை பறிமுதல் செய்துள்ளோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சுமார் 50 மணி நேர விசாரணைக்குப் பிறகு பியூஷ் ஜெயின்நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இரவு கான்பூர் போலீஸ்நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட அவர் கான்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஸ்கூட்டரில் பயணம்

தொழிலதிபர் பியூஷ் ஜெயின் கன்னோஜில் உள்ள தனது பூர்விக வீட்டுக்கு வரும்போது மிகவும் எளிமையாக வாழ்ந்துள்ளார். தனதுபழைய ஸ்கூட்டரில் எவ்வித பாதுகாப்பும் இன்றி நகரை சுற்றித் திரிந்துள்ளார். அவரது வீட்டில் 2 பழைய கார்கள் நிறுத்தப் பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x