Published : 27 Dec 2021 02:40 PM
Last Updated : 27 Dec 2021 02:40 PM

‘‘இது வெறும் டிரெய்லர் தான், உண்மையான படம் பஞ்சாப் தேர்தல் தான்’’- சண்டிகர் வெற்றி; ஆம் ஆத்மி உற்சாகம்

சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி, இது வெறும் டிரெய்லர் தான், உண்மையான படம் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் தான் எனக் கூறியுள்ளது.

பஞ்சாப் - ஹரியாணா மாநிலங்களின் பொது தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப் பட்டது.

இதில் மொத்தமுள்ள 35 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 14இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது மாநகராட்சியை கையில் வைத்துள்ள பாஜக 12 வார்டுகளை மட்டுமே கைபற்றியது. காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அகாலி தளம் ஓரிடத்தில் வென்றுள்ளது.

பாஜக சார்பில் தற்போது மேயராக உள்ள ரவி காந்த் சர்மா இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இதுபோலவே பாஜகவின் முன்னாள் மேயர்கள் ரவிகாந்த் சர்மா மற்றும் தாவேஷ் மௌத்கில் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். மௌத்கில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஜஸ்பிர் சிங்கிடம் 939 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஷர்மா 888 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

சண்டிகர் மாநகராட்சியில் தற்போது பொறுப்பில் உள்ள பாஜக தேர்தலில் தோல்வியடைந்தது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ராகவ் சதா

இந்தநிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் ராகவ் சதா இதுபற்றி கூறியதாவது:

சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டோம். எங்களைப் போன்ற நேர்மையான கட்சிக்கு இவ்வளவு அன்பையும் நம்பிக்கையையும் அளித்த சண்டிகர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சி சார்பாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் சார்பாகவும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சண்டிகர் வெறும் டிரெய்லர் தான். உண்மையான படம் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் தான்’’ எனக் கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x