Published : 20 Dec 2021 07:55 AM
Last Updated : 20 Dec 2021 07:55 AM
புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் வடக்கு பிரிவு கமாண்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா. இவரது மூத்த சகோதரி சுஷ்மா சிங் (68) மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நோய்க்கான புதிய மருந்துக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு அனுமதி கிடைத்துள்ளது. இந்த மருந்து எனக்கும் இந்தியாவில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பல பெண்களுக்கும் தேவைப் படுகிறது” என பதிவிட்டுள்ளார்.
சகோதரியின் இந்த பதிவை ஹூடா டேக் செய்திருந்தார். இந்த தகவல் அறிந்த 2 மணி நேரத்தில் ஹூடாவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
இதுகுறித்து ஹூடா கூறும் போது, “பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியது ஆச்சரியமாக இருந்தது. எனது சகோதரி நிலை குறித்து அவர் கேட்டார். கண்ணீர் ததும்ப அவரது நிலையை சொன்னேன். அப்போது முடிந்தவரை புதிய மருந்து கிடைக்க முயற்சி மேற் கொள்ளப்படும் என பிரதமர் உறுதி அளித்தார்” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT