Published : 23 Mar 2016 08:54 PM
Last Updated : 23 Mar 2016 08:54 PM
விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அரசு இன்று (புதன்கிழமை) முடிவு செய்தது.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது” என்றார்.
இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு மூலம் அடிப்படை சம்பளத்திலிருந்து 119 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 125 சதவீதமாக அதிகரிக்கும்.
இதன்மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 58 லட்சம் ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14,725 கோடி கூடுதல் செலவாகும்.
பணவீக்கத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டது. இது 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT