Last Updated : 28 Nov, 2021 09:48 AM

 

Published : 28 Nov 2021 09:48 AM
Last Updated : 28 Nov 2021 09:48 AM

பெங்களூரு வந்த தென்ஆப்பிரிக்க நாட்டினர் இருவருக்கு கரோனா பாஸிட்டிவ்: ஓமைக்ரான் பாதிப்பு? இதுவரை 94 பேர் வருகை

பிரதிநிதித்துவப்படம்

பெங்களூரு 


பெங்களுருவுக்கு வந்த தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் அடுத்தக் கட்ட ஆய்வுக்கும் ஓமைக்ரான் வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா எனக் கண்டறியவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க நாட்டினர் இருவரும் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால்கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

ஓமைக்ரான் வைரஸ் அச்சத்தால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதேபோன்று இந்தியாவும், தென் ஆப்பிரி்க்கா, தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது, அல்லது விமானங்களைத் தடை செய்வது குறித்து பிரதமர் மோடி தலைமையில்உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

ஹாங்காங், இஸ்ரேலில் இருந்துவரும் பயணிகளுக்கு கூடுதலான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும், குறிப்பாக இந்தியாவுக்கு வந்தபின் அந்தப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனையும், தனிமைப்படுத்துதலும் இருக்கும் .

இந்நிலையில் பெங்களூரு நகருக்கு நேற்று வந்த தென் ஆப்பிரிக்க நாட்டினர் இருவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அவர்கள் உடலில் இருந்து ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு ஓமைக்ரான் வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா எனக் கண்டறிய அடுத்தக்கட்ட பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களுரு கிராமப்புற துணை ஆணையர் கே. ஸ்ரீநிவாஸ் கூறுகையில்” நவம்பர் 1ம் தேதி முதல் 26ம் தேதிவரை தென் ஆப்பிரிக்காவில் இருந்து 94 பேர் வந்துள்ளனர். அதில் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. யாரும் அச்சப்படத்தேவையில்லை.

தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.அவர்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், அடுத்தகட்ட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

10 நாடுகள் எச்சரிக்கைப் பட்டியலி்ல் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு கண்டிப்பாக பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும். தொற்று இருந்தால் தனிமைப்படுத்தப்படுவார்கள். நெகட்டிவ் வந்தால் மட்டும் அவர்கள் விமானநிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

நெகட்டிவ் வந்தாலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வீட்டில் 7 நாட்கள் தனிமையில் இருந்து அங்கு மறுபடியும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனை செய்து அதில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

எச்சரிக்கைப் பட்டியலி்ல் உள்ள நாடுகளில் இருந்து கடந்த 26ம் தேதிவரை பெங்களூருவுக்கு 584 பேர் வந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x