Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM

கர்நாடகாவை உலுக்கும் பிட்காயின் மோசடி: நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

பெங்களூரு

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கடந்த சில தினங்களுக்கு முன்பு, “பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு தொடர்பு இருக்கிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே உள்ளிட்டோரும் ஆதாரங்களை வெளியிடப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர். அதன்பிறகு அமலாக்கத் துறை விசாரணைக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். ஆனால், சிபிஐ விசாரணை கோரி காங்கிரஸார் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் ப‌சவராஜ் பொம்மை கூறும்போது, '' பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்த விவகாரத்தில் பாரபட்சம் இல்லாமல் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பிட்காயின் முறைகேட்டை காங்கிரஸாருக்கு முன்பாக வெளிக்கொண்டு வந்ததே பாஜக தான். அமலாக்கத் துறை விரைவில் விசாரணையை தொடங்க இருக்கிறது. பாஜக மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்திவிட்டு, காங்கிரஸார் அதற்கான ஆவணங்களை வெளியிட வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x