Published : 15 Oct 2021 01:33 PM
Last Updated : 15 Oct 2021 01:33 PM

ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தை: ரஷ்ய அழைப்பை ஏற்றது இந்தியா

மாஸ்கோவில் நடக்கும் ஆப்கானிஸ்தான் பற்றிய பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியாவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியா பங்கேற்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா அந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தொடர்பாக மாஸ்கோவில் அக்டோபர் 20ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் தலைமையில் சர்வதேசக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தலிபான்களுக்கும் ரஷ்யா அழைப்பு விடுக்கவுள்ளது.

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, தனது ராணுவ பலத்தை அதிகரிக்க தஜிகிஸ்தானில் ரஷ்யா ராணுவப் பயிற்சிகளை நடத்தியதுடன், அங்குள்ள ராணுவத் தளத்தில் அதன் ஆயுதங்களையும் பலப்படுத்தி வருகிறது.

பின்னணி:

ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தனர்.

ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 90களில் தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருந்ததால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். ஆனால், மக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தலிபான்கள் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x